×

அமைதி பேச்சுவார்த்தை தொடங்கும் நிலையில் லெபனான் எல்லைக்குள் நுழைந்த இஸ்ரேல் பிரதமர்: பாதுகாப்பு கவச உடையுடன் அதிரடி ஆய்வு

ஜெருசலேம்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு லெபனான் எல்லைக்குள் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வளையப் பகுதிக்கு நேரில் சென்று ராணுவ வீரர்களைச் சந்தித்துப் பேசினார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 2ம் தேதியன்று லெபனான் நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹிஸ்புல்லா அமைப்பு போரின் அடுத்த கட்டத்தை அறிவித்தது. இதற்குப் பதிலடியாக அதே மார்ச் மாதத்தில் இஸ்ரேல் ராணுவம் லெபனான் நாட்டுக்குள் தரைப்படை ஊடுருவல் நடத்தி தாக்குதலைத் தொடங்கியது.

இந்தச் சூழலில் நேற்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு லெபனான் எல்லைக்குள் நுழைந்தார். குண்டு துளைக்காத கவச உடை அணிந்திருந்த அவருடன் பாதுகாப்பு துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் மற்றும் ராணுவ தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஈயால் ஜமீர் ஆகியோர் சென்றிருந்தனர். அங்குள்ள ராணுவ முகாமில் இருந்து வீடியோ மூலம் உரையாற்றிய பெஞ்சமின் நெதன்யாகு, ‘தீய சக்திகள் நம்மை அழிக்கத் திட்டமிட்டன. ஆனால் தற்போது அவர்கள் தங்களின் உயிர் பிழைப்புக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். லெபனானில் இருந்து ஊடுருவும் அச்சுறுத்தலை முறியடித்துள்ளோம். போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை, இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் மீதம் உள்ளன’ என்று கூறினார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இஸ்லாமாபாத்தில் போர் நிறுத்த உடன்படிக்கை தோல்வியில் முடிந்த நிலையில், லெபனான் எல்லையில் இஸ்ரேல் ராணுவம் 100 சதவீதம் தனது கட்டுப்பாட்டை நிலைநிறுத்தி வருகிறது. லெபனான் விவகாரம் தொடர்பாக அமெரிக்காவில் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்க இன்னும் 48 மணி நேரமே உள்ள நிலையில், ெநதன்யாகுவின் இந்த லெபனான் பயணம் சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Tags : ISRAELI ,LEBANON ,JERUSALEM ,BENJAMIN NETANYAHU ,Iran ,United States ,Israel ,
× RELATED டெல்லி ரிமோட் கன்ட்ரோலுக்கு...