அமெரிக்காவுடன் விளையாடாதீர்கள்: ஈரானுக்கு துணை அதிபர் வான்ஸ் எச்சரிக்கை

இஸ்லாமாபாத்: அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான முக்கியத்துவம் வாய்ந்த அமைதி பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் நடைபெற இருந்த நிலையில் லெபனான் மீது இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்துவதால் அமைதி பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலை அமெரிக்கா கட்டுப்படுத்தாவிட்டால் பேச்சுவார்த்தையில் இருந்து விலகப்போவதாக ஈரான் அறிவித்தது. இதையடுத்து அமெரிக்காவுடன் ஈரான் விளையாட வேண்டாம் என்று அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் எச்சரித்தார்.

ஈரான் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் 38 நாட்களாக தீவிர தாக்குதலை நடத்தின. போர் மூண்டதும், வளைகுடா நாடுகளில் இருந்து உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் டேங்கர் கப்பல்கள் பயன்படுத்தும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால், சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்ததோடு, பல நாடுகளில் எரிபொருள், எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டது.

இந்த நிலையில், கடந்த 8ம் தேதி பாகிஸ்தான் நாட்டின் மத்தியஸ்தம் காரணமாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இரண்டு வார கால தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்கவும், 10 அம்ச அமைதி திட்டத்தை பரிசீலிக்கவும் ஈரான் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். எனினும் இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் லெபனான் நாட்டுக்கும் பொருந்துமா என்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.

இந்த போர்நிறுத்தம் லெபனானுக்கும் பொருந்தும் என ஈரான் மற்றும் பாகிஸ்தான் தரப்பு கூறுகிறது. இந்த ஒப்பந்தம் அமெரிக்கா – ஈரான் இடையிலான நேரடி மோதலுக்கு மட்டுமே பொருந்தும் என்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூறி வருகின்றன. மேலும் இஸ்ரேல் படைகள் லெபனான் மீது கடந்த 2 நாட்களாக மிகக்கடுமையான வான்வழித் தாக்குதலை நடத்தின. ஒரே நாள் தாக்குதலில் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் 1,150க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.

இந்த பதற்றமான சூழலில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி கூறுகையில், ‘இஸ்ரேல் நாடு அமைதி ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை முறியடிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது. போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீற நெதன்யாகுவை அமெரிக்கா அனுமதித்தால், அமெரிக்காவின் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்ய ஈரான் தயாராக உள்ளது’ என்று எச்சரித்துள்ளார். ஆனால், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ‘வடக்கு இஸ்ரேல் பாதுகாப்பாக இருக்கும் வரை தேவையான இடங்களில் தாக்குதல் தொடரும்’ எனத் தெரிவித்துள்ளார்.

அமைதி உடன்படிக்கையின் ஒருபகுதியாக, அமெரிக்கா மற்றும் ஈரான் நாட்டு உயர்நிலை பிரதிநிதிகள் பங்கேற்கும் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தலைமையிலான குழுவும், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் தலைமையிலான குழுவும் இதில் பங்கேற்கின்றன இஸ்லாமாபாத்தில் நேற்று பேச்சுவார்த்தை தொடங்க இருந்தநிலையில், லெபனான் மீதான தாக்குதலை அமெரிக்கா கட்டுப்படுத்தாவிட்டால் பேச்சுவார்த்தையில் இருந்து விலகப்போவதாக ஈரான் திடீரென அறிவித்தது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக வாஷிங்டனில் இருந்து பாகிஸ்தான் புறப்பட்ட அமெரிக்க துணை அதிபர் ஜெ.டி.வான்ஸ் கூறுகையில், அமெரிக்காவுடன் ஈரான் விளையாட வேண்டாம் என்று எச்சரித்தார். இது மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக அமைதி தொடருமா? அல்லது மீண்டும் போர் மூளுமா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

* ஈரான் மறுப்பு
ஈரான் டிரோன்கள் மூலமாக நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியதாக குவைத் மற்றும் சவுதி அரேபியா குற்றம்சாட்டியிருந்த நிலையில் ஈரான் அதனை மறுத்துள்ளது. ஈரானின் துணை ராணுவப் படையான புரட்சிகரப் பாதுகாப்பு படை பாரசீக வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தவில்லை என்று ஈரான் அரசு நடத்தும் செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* சீனாவின் பெய்ஜிங்கில் அடுத்த மாதம் நடைபெறும் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக அதிபர் டிரம்பின் சீனா செல்கின்றார். இதற்கு முன்னதாக ஈரான் போர் நிறுத்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சீனா திட்டமிட்டு வருகின்றது.

* 6 மாத போர் நிறுத்தம்
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேல் -காசா இடையோன போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்து 6 மாதங்களாகின்றது- இஸ்ரேல் படைகளுக்கும், ஹமாசுக்கும் இடையிலான தீவிரமான தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது.

* ஈரான் டிரோன்களை வீழ்த்திய உக்ரைன்
ஈரான் போரின்போது மத்திய கிழக்கு நாடுகளில் உக்ரைன் படைகள் ஈரானின் டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி முதல் முறையாக வெளிப்படுத்தி உள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா பயன்படுத்தும் ஈரானில் வடிவமைக்கப்பட்ட டிரோன்களை தடுப்பதற்காக பயன்படுத்தப்பட்ட உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இடைமறிப்பு டிரோன்களை பயன்படுத்தி வெளிநாடுகளில் உக்ரைன் படைகள் தீவிர நடவடிக்கையில் பங்கேற்றன.

* சமாதான வாரியம்
சமீபத்தில் அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட அதிபர் டிரம்ப் தலைமையிலான அமைதி வாரியம் காசாவை மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் எழும் பிற மோதல்களையும் தீர்க்கும் விரிவான நோக்கங்களுடன் தனது பணிகளை தொடங்கியது. வாரியத்தின் முதல் கூட்டம் நடந்து ஒன்பது நாட்களுக்கு பிறகு அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தின. அதன் பின் அமைதி வாரியம் கூட்டப்படவில்லை. ஆயுதங்களை களைவதற்கான முன்மொழிவு குறித்த ஹமாஸ் பதிலுக்காக காத்திருக்கின்றது.

* பாக்.கிற்கு இஸ்ரேல் கண்டனம்
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிப், இஸ்ரேலை அழித்தொழிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் கண்டனம் தெரிவித்துள்ளார். எந்த ஒரு அரசிடம் இருந்தும் குறிப்பாக மத்தியஸ்தராக தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் ஒரு அரசிடம் இருந்து சகித்துக்கொள்ளக்கூடிய அறிக்கை இது இல்லை என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

* அடுத்த வாரம் பேச்சுவார்த்தை
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அண்டை நாடுகளுக்கு இடையே உறவுகளை ஏற்படுத்துவதையும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா போராளிகளை நிராயுதபாணியாக்குவதையும் நோக்கமாக கொண்டு லெபனானுடன் முடிந்தவரை விரைவில் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

* கப்பல் செல்ல கட்டணம்?
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் கட்டணம் வசூலிப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில், ‘‘ஈரான் அவ்வாறு செய்யக்கூடாது. ஒரு வேளை செய்தால் இப்போதே நிறுத்த வேண்டும்” என்று வலியுறுத்தி இருக்கிறார்.

* முன்னாள் வெளியுறவு அமைச்சர் உயிரிழப்பு
ஈரான் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரும் மறைந்த அயதுல்லா அலி காமேனிக்கு வெளியுறவு விவகார ஆலோசகராகவும் இருந்த கமல் கராசி கடந்த வாரம் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் காயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

* திரும்பி சென்ற கப்பல்
ஹார்முஸ் ஜலசந்தி தொடர்ந்து ஈரானின் கட்டுப்பாட்டில் இருப்பதை அடிக்கோடிட்டு காட்டும் வகையில் போட்ஸ்வானா கொடியுடன் கூடிய இயற்கை எரிவாயு டேங்கர் ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்பு படையால் உத்தரவிடப்பட்ட ஒரு வழித்தடத்தில் வெளியேற முயன்றது. பின்னர் திடீரென திரும்பிச் சென்றதாக தரவுகள் காட்டுகின்றன. நேற்று முன்தினம் நான்கு டேங்கர்கள் மூன்று சரக்கு கப்பல்களும் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து சென்றன.

Related Stories: