எப்ஸ்டீனின் குற்றங்கள் குறித்து எனக்குத் தெரியாது: அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா மறுப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் பாலியல் குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதில் அதிபர் டிரம்ப், முன்னாள் அதிபர் கிளிண்டன் உட்பட பல பிரபலங்களின் பெயர்கள் இடம்பெற்று இருந்தன. இது பயங்கர சர்ச்சைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் அமெரிக்க முதல் பெண்மணியான அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்பிற்கும் எப்ஸ்டீனுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனை தொடர்ந்து மெலனியா தன் மீதான இந்த கருத்துகளை மறுத்துள்ளார். வெள்ளை மாளிகையில் அறிக்கை வெளியிட்ட மெலனியா, பாலியல் குற்றவாளியான மறைந்த எப்ஸ்டீனுடன் எனக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் என் மீதான அவதூறு ஆகும். எப்ஸ்டீனுடன் எனது தொடர்பு குறித்து பரப்பப்படும் ஆதாரமற்ற மற்றும் அடிப்படையற்ற பொய்களுக்கு எதிராக நானும் எனது வழக்கறிஞர்களும் போராடி வருகிறோம்.

இழிவான எப்ஸ்டீனுடன் என்னை இணைக்கும் பொய்கள் இன்று முடிவுக்கு வர வேண்டும். என்னைப்பற்றி பொய் கூறுபவர்களிடம் அறநெறி, பணிவு மற்றும் மரியாதை ஆகியவை அறவே இல்லை. அவர்களின் அறியாமையை நான் எதிர்க்கவில்லை. மாறாக எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் அவர்களின் கீழ்த்தரமான முயற்சிகளை நான் நிராகரிக்கிறேன்” என்று தெரிவித்தார்.

Related Stories: