பயணிகளுக்கு இடையூறு தரும் வகையில் விமானத்தில் போதையில் நடிகை ரகளை: ஊழியர்கள் உதவியுடன் போலீசில் ஒப்படைப்பு

 

லாஸ் ஏஞ்சலஸ்: அமெரிக்காவின் பிரபல நடிகை நடாஷா லியோன் (47) கடந்த ஜனவரி மாதம், தான் மீண்டும் போதை பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டதாக உருக்கமாக தெரிவித்து இருந்தார். சுமார் 10 ஆண்டுகள் போதை பழக்கமின்றி இருந்த அவர், மீண்டும் அதில் சிக்கியது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடந்த 7ம் தேதி இரவு, ஹாலிவுட்டில் நடந்த சினிமா விழாவில் கலந்து கொண்ட அவர், பின்னர் லாஸ் ஏஞ்சல்சில் இருந்து நியூயார்க் செல்வதற்காக ‘டெல்டா’ விமானத்தில் ஏறினார்.

விமானம் புறப்பட தயாரானபோது, முதல் வகுப்பு இருக்கையில் அமர்ந்திருந்த நடாஷா லியோன் தன் வசம் இருந்த லேப்டாப் கருவியை அணைக்க மறுத்ததுடன், சீட் பெல்ட்டையும் அணியாமல் அடம் பிடித்துள்ளார். மேலும் அவர் சுயநினைவின்றி ஏதோ ஒரு குழப்பமான நிலையில் இருந்ததை கண்ட விமான ஊழியர்கள், அவரை எச்சரித்தனர். ஆனால் அவர் எதையும் கேட்கவில்லை. இறுதியில் விமானியின் உத்தரவின் பேரில் போலீசார் உதவியுடன் அவர் விமானத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து நேற்று தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடாஷா லியோன், ‘எங்கள் நாட்டு விமான நிலையங்களில் ஊதியம் இன்றி பணியாற்றும் ஊழியர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. கடந்த புதன்கிழமை அன்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க திட்டமிட்டிருந்தேன், ஆனால் அது நடக்காமல் போய்விட்டது. மற்றபடி ஊடகங்கள் சொல்லும் கதைகளை பற்றி எனக்கு கவலை இல்லை’ என்று கூறியுள்ளார்.

Related Stories: