ஈஸ்டரை ஒட்டி ரஷ்யா அறிவித்துள்ள 32 மணிநேர போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என உக்ரைன் கோரிக்கை விடுத்துள்ளது. ஈஸ்ட்டருக்கு பிறகும் கூட ரஷ்யா மீண்டும் தாக்குதல் நடத்தாமல் இருக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தி உள்ளார்.
ஆர்த்தடாக்ஸ் ஈஸ்டர் (Orthodox Easter) பண்டிகையை முன்னிட்டு சனிக்கிழமை, ஏப்ரல் 11 அன்று 16:00 MSK முதல் ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 12 அன்று நள்ளிரவு வரை 32 மணி நேர போர்நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்தது. பகைமை நீட்டிப்பதை குறைக்க, சண்டையை நிறுத்தத்தை நீட்டிக்க ஜெலென்ஸ்கி தற்போது வலியுறுத்தி உள்ளார். மோதலை தற்காலிகமாக நிறுத்துமாறு விடுக்கப்பட்ட அழைப்புகளைத் தொடர்ந்து, அமைதியைக் காப்பதற்காகப் பரஸ்பர நடவடிக்கைகளை மேற்கொள்ள தங்கள் நாடு தயாராக இருப்பதை உக்ரைன் அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
தற்போது ரஷ்யா அறிவித்துள்ள போர் நிறுத்தமானது, போர் நடவடிக்கைகளுக்கு விடுமுறைக்கால இடைவேளை அளிக்குமாறு உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி மீண்டும் மீண்டும் விடுத்த பல கோரிக்கைளை தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு உள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 32 மணி நேர இடைகால போர் நிறுத்தத்திற்கு உத்தரவிட்டு, ரஷ்ய ராணுவத் தலைமையகத்தை போர் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கும்படி உத்தரவிட்டார். பல முறை கோரிக்கை விடுத்த பின் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையை வரவேற்ற உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, உக்ரைனும் தற்காலிகமாக தாக்குதல்களை நடத்தாது என்றும், “அமைதியை நோக்கிய உண்மையான நகர்வை” நோக்கமாகக் கொண்டு, ஈஸ்டர் பண்டிகைக்குப் பிறகு ரஷ்யா மீண்டும் தாக்குதல்களைத் தொடங்க கூடாது என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடுமையான சண்டை நடந்துகொண்டிருந்த போது இந்த போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரஷ்யா இதை ஒரு “மனிதாபிமான நடவடிக்கை” என்றும், உக்ரைன் இது ஒரு அவசியமான தற்காலிக நிவாரணம் என்றும் அவரவர் தரப்பிலிருந்து கூறி உள்ளன. எனினும் இரு நாடுகளும் இதற்கு முன்னர் இது போன்ற குறுகிய கால போர் நிறுத்தம் அறிவித்து விட்டு அதனை மீறியுள்ளனர் அல்லது ஒருவரையொருவர் மீறியதாகக் குற்றம் சாட்டியுள்ளனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
மக்களுக்கு அச்சுறுத்தல்கள் இல்லாத ஒரு ஈஸ்டர் பண்டிகையும், அமைதியை நோக்கிய ஒரு உண்மையான நகர்வும் தேவை என்று உக்ரைன் அதிபர் தனது அறிக்கை ஒன்றி குறிப்பிட்டு உள்ளார். உக்ரைனுடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவர ஒரு விரிவான ஒப்பந்தம் தேவை என்று கூறி, நீண்டகால அல்லது காலவரையற்ற போர் நிறுத்தங்களை ரஷ்யா தொடர்ந்து நிராகரித்து வருகிறது. பிப்ரவரி 2022-இல் இரு நாடுகளுக்கிடையிலான மோதலானது ஒரு முழு அளவிலான போராக மாறியது குறிப்பிடத்தக்கது.
