திருச்சி: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களை கவரும் வகையிலும், பெண்கள் அதிகாரமளிப்பை பரவலாக்கும் வகையிலும் ‘சக்தி’ அல்லது ‘பிங்க் வாக்குச்சாவடிகள்’ அமைக்கும் பணிகள் பல மாவட்டங்களிலும் நடந்து வருகின்றன. பெண் வாக்காளர்களின் பங்கேற்பை அதிகரிப்பதுடன், பெண்கள் அதிகாரமளிப்பை வெளிப்படுத்தும் நோக்கிலும் இந்த சிறப்பு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளின் முக்கிய தனிச்சிறப்பு என்னவெனில் தலைமை வாக்குச்சாவடி அலுவலர் முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பொறுப்பாளர், வரிசை ஒழுங்கு பணியாளர், பாதுகாப்பு மற்றும் உதவி மேசை வரை அனைத்து பணிகளிலும் பெண்கள் மட்டுமே இருப்பர்.
பாதுகாப்பு பணியிலும் பெண் போலீசாரே இருப்பர். முழுக்க முழுக்க பெண்களே இந்த பிங்க் வாக்குச்சாவடிகளை நிர்வகிப்பார்கள். இந்த வாக்கு சாவடிகளில் இளஞ்சிவப்பு நிற அலங்காரம், விழிப்புணர்வு பலகைகள், கர்ப்பிணிகள், மூதாட்டிகளுக்கு முன்னுரிமை, குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கு தனி உதவி, குடிநீர், நிழற்குடை, அமர்வதற்கான வசதிகள், பெண்களுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற்றிருக்கும். சென்னை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மாநகர பகுதிகளில் ஏதேனும் ஒரு முக்கிய தொகுதியில் குறைந்தது ஒரு ‘பிங்க்’ வாக்குச்சாவடி அமைக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதேபோல் சுற்றுச்சூழல் குறித்த பொறுப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில இடங்களில் ‘பசுமை வாக்குச்சாவடிகள்’ அமைக்கவும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி ஒருமுறை பயன்படுத்தும் பொருட்களை குறைத்து, இயற்கைக்கு ஏற்ற பொருட்கள் மூலம் வாக்குச்சாவடிகளை அமைப்பதே இந்த ‘பசுமை வாக்குச்சாவடிகள்’. இந்த வாக்குச்சாவடிகளில் பிளாஸ்டிக் இல்லாத அலங்காரம், மூங்கில், தென்னை ஓலை, துணி பதாகைகள், மண் பானை குடிநீர் வசதி, மீள் பயன்பாட்டு இருக்கைகள் போன்றவை இடம் பெறும்.
வாக்காளர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்த சில இடங்களில் மரக்கன்றுகள் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி பிளாஸ்டிக் இல்லாமல் மூங்கில், தென்னை ஓலை அலங்காரம், மண் பானை குடிநீர், காகிதம் மற்றும் துணி அறிவிப்பு பலகைகள், கழிவுப்பொருள் பிரிப்பு தொட்டிகள் வாக்குச்சாவடியில் அமைக்கப்படும்.
கடந்த தேர்தலில் திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட முழுமையான இயற்கை வாக்குச்சாவடியில் வாக்களித்தவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து, இம்முறை சென்னை, கோவை, காஞ்சிபுரம் உள்ளிட்ட சில இடங்களில் இதை விரிவுபடுத்த தேர்தல் கமிஷன் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. ‘ஒரு ஓட்டு ஜனநாயகத்தை காக்கும், ஒரு மரக்கன்று பூமியை காக்கும்’ என்ற கருத்தை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் இந்த பசுமை வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.
