சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாள் நெருங்கி வருகிறது. ஒவ்வொரு அரசியல் கட்சியும், தேர்தல் பரப்புரையில் தீவிர கவனம் செலுத்திவருகிறது. நேற்று முன்தினம் வேட்புமனுத் தாக்கல் செய்யக் கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்தது. நேற்று வேட்புமனு பரிசீலனையும் முடிந்து, தகுதியில்லாத வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது. அப்படி நிராகரிக்கப்பட்ட வேட்புமனுவில் தவெகவின் இடைப்பாடி தொகுதி வேட்பாளர் அருண்குமாரின் வேட்புமனுவும் ஒன்று. வேட்புமனு நிராகரிக்கப்பட்டதன் பின்னணியில் மிகப்பெரிய ஸ்கெட்ச் போடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கி முதல் முறையாகத் தேர்தலைச் சந்திக்கிறார். தவெக தனித்துப் போட்டியிடும் நிலையில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார் விஜய். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஏற்கனவே அவர்கள் இருந்த கட்சியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் கட்சி மாறியவர்கள் மற்றும் குற்ற வழக்குகள் உள்ளவர்கள் என்ற விமர்சனம் எழுந்தது. இந்நிலையில், 234 தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இடைப்பாடி தொகுதியில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகத் தவெக சார்பில் அறிவிக்கப்பட்ட அருண்குமாரின் வேட்புமனுவும், மாற்று வேட்பாளராக அவரது மனைவியின் பெயரில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் நிராகரிக்கப்பட்டதால் தவெக சார்பில் யாரும் அந்தத் தொகுதியில் போட்டியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது.
தவெக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அருண்குமார் சேலம் வீராணம் அருகே உள்ள வலசையூரைச் சேர்ந்தவர். சீட் வழங்கியபோதே இடைப்பாடி தொகுதியில் சேலம் வீராணத்தைச் சேர்ந்தவருக்குச் சீட் வழங்கியது தவெகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரணம், அருண்குமார் ஒரு காலத்தில் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளராக இருந்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் வலசையூரில் ஒருமுறை அதிமுக சார்பில் போட்டியிட்டு கவுன்சிலராகப் பொறுப்பு வகித்து வந்துள்ளார். அதைத்தொடர்ந்து குறுகிய காலத்தில் வேறுகட்சிக்குத் தாவிய அவர், எடப்பாடி பழனிசாமியின் காலில் விழுந்து ஆசிபெற்று, மீண்டும் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.
இந்நிலையில், மாஜி அமைச்சர் செங்கோட்டையன், மாஜி அதிமுக எம்எல்ஏக்கள் வெங்கடாசலம், பல்பாக்கி கிருஷ்ணன் ஆகியோருடன் அருண்குமாரும் விஜயின் தவெகவுக்கு சென்றுள்ளார். விஜய் சேலத்துக்கு வந்தபோது, விஜயை வரவேற்கும் வகையில அருண்குமார், செங்கோட்டையன், வெங்கடாசலம் ஆகியோரின் புகைப்படத்துடன் பிளக்ஸ் வைத்திருந்தார். சேலம் மாவட்ட தவெக நிர்வாகி தமிழன் பார்த்திபனின் ஆதரவாளர்கள் அதைக் கிழித்தெறிந்து, தமிழன் பார்த்திபன் படம் மட்டுமே இருக்க வேண்டும் என கறாராகக் கூறி அருண்குமாரிடம் தகராறில் ஈடுபட்டனர். இந்தப் பிரச்னைகளையெல்லாம் கடந்த அருண்குமாருக்கு, தவெகவில் சீட் வழங்கப்பட்டுள்ளது.
தனது செல்வாக்கால் அருண்குமார் சீட் பெற்றுள்ளதாக கட்சி மட்டத்தில் உள்ள நிர்வாகிகள் தெரிவித்து வரும் நிலையில், இவர் ஏற்கனவே எடப்பாடியின் தீவிர விசுவாசியாக இருந்தவர். மேலும், அடிக்கடி கட்சி மாறியும் பழக்கப்பட்டவர் என்பதால், கடைசி நேரத்தில் ‘பல்டி’ அடித்து எடப்பாடி பக்கம் கவிழ்ந்து விடுவாரோ என்றும் தவெகவினர் கலக்கத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது, தவெகவினர் நினைத்தது ‘அந்தர் பல்டி’ அடித்துள்ளார் அருண்குமார். தவெகவின் பெரும்பாலான வேட்பாளர்கள் 4ம் தேதிக்கு முன்னதாகவே வேட்பு மனு தாக்கல் செய்துவிட்ட போதிலும், அருண்குமார் வேட்புமனுத் தாக்கலுக்கு இறுதி நாளான நேற்று முன்தினம்தான் தனது வேட்புமனுவையும், மாற்று வேட்பாளர் என்ற வகையில் தனது மனைவியின் பெயரிலும் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
ஆனாலும் அந்த வேட்புமனு முழுமையாக நிரப்பப்படாமல், அறைகுறையாகவே நிரப்பியும், தேவையான ஆவணங்களை இணைக்காமலும் தாக்கல் செய்துள்ளார். மேலும், வேட்புமனுவுக்குச் சாட்சிக் கையெழுத்திடும் நபர்கள் குறித்த ஆவணங்களையும் வழங்காமல் இருந்துள்ளார்.
இந்நிலையில், தேவையான ஆவணங்களை எடுத்து வருவதாகச் சொல்லிச் சென்றவர் அதற்குப் பிறகு தவெகவினர் கண்ணில் படவேயில்லை. தனது செல்போனை அணைத்துவிட்டுத் தலைமறைவாகிவிட்டார் என்று கூறப்படுகிறது. அதனால் நேற்று காலை தவெகவினர் தங்களின் வேட்பாளரைக் காணவில்லை எனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரை யாரோ கடத்திவிட்டார்கள் என்றும் கூறியுள்ளனர். அப்போதும், தாங்கள் ஏமாற்றப்பட்டது அவர்களுக்குத் தெரியாமல் இருந்துள்ளது.
நேற்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில், போதுமான தகவல்களும் ஆவணங்களும் இல்லாதததால் தவெக வேட்பாளர் அருண்குமாரின் வேட்புமனுவும், அவரது மனைவியின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டதாகத் தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்துள்ளார். அந்தத் தொகுதியில் தவெக சார்பில் வேறு எவரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் தவெக 233 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்குப் பின்னணியில் எடப்பாடி பழனிசாமியின் திட்டம் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஒருவேளை தவெக சார்பில் யாராவது எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டால் அதன் மூலம் வாக்குகள் பிரியும் வாய்ப்புள்ளது.
அப்படிப் பிரிந்தால் அது தனக்கு எதிராக முடிந்துவிடக்கூடும் என்பதால் அதை முறியடிக்கத் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. அதன்படி தனது விஸ்வாசி அருண்குமாரைத் தவெகவுக்கு அனுப்பியுள்ளார். எப்படியோ அருண்குமாருக்கு அவர் கேட்டபடி எடப்பாடி தொகுதியைத் தவெக ஒதுக்கியது. திட்டமிட்டபடி அறைகுறையான வேட்புமனுவைத் தாக்கல் செய்து, அது நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் அடிப்படையில் தான் தவெகவைச் சேர்ந்த வேறு எவரையும் மாற்று வேட்பாளராக மனுத்தாக்கல் செய்யாமல், தனது மனைவியையே மாற்று வேட்பாளராக மனுத்தாக்கல் செய்யவைத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
மிக நேர்த்தியாகக் காய்களை நகர்த்திய எடப்பாடி பழனிசாமி தனது செயல்திட்டத்தைச் சரியாகச் செயல்படுத்தியுள்ளார் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாகக் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவிக்கும் நெட்டிசன்கள் எடப்பாடி பழனிசாமியின் ஆள் தனது வேலையைக் கச்சிதமாகச் செய்து முடித்துவிட்டுத் தலைமறைவாகிவிட்டார். இவர்தான் உண்மையான ஸ்லீப்பர் செல் எனப் பதிவிட்டு வருகிறார்கள்.
