டெல்லி பாஜ தலைமை அவசர அழைப்பு; தனி விமானத்தில் அண்ணாமலை டெல்லி பயணம்: முக்கிய பொறுப்பு வழங்கப்படுமா?

 

மீனம்பாக்கம்: தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்று இரவு தனி விமானத்தில் டெல்லி சென்றார். அங்கு அவர் பாஜ முக்கிய தலைவர்களை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. புதுவை மாநிலம் காரைக்காலுக்கு தனி ஹெலிகாப்டரில் சென்று தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் நேற்று மாலை 6 மணியளவில் சென்னை பழைய விமான நிலையம் வந்தார். அங்கு முக்கிய விருந்தினர் அறையில் ஓய்வெடுத்த அவர் தனி விமானத்தில் நேற்றிரவு 7.20 மணியளவில் டெல்லிக்குப் புறப்பட்டு சென்றார்.

பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் அவசர அழைப்பின் பேரில், அண்ணாமலை டெல்லி சென்றதாக கூறப்படுகிறது. தமிழக பாஜ தலைமைக்கும் அண்ணாமலைக்கும் இடையே சுமூக உறவு இல்லாத நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் அண்ணாமலை பேசுகையில், தமிழக தேர்வு குழுவினர் டெல்லிக்கு அனுப்பிய வேட்பாளர் பட்டியலில் எனது பெயரையே சேர்க்கவில்லை. அப்படி இருக்கையில், எனக்கு எப்படி சீட் கிடைக்கும்? இதற்கு டெல்லியில் உள்ள கட்சி மேலிடத்தை நான் குறை கூறமாட்டேன். இன்னும் காலம் இருக்கிறது. காட்சிகள் மாறத்தான் போகிறது என்று விரக்தியாக பேசியிருந்தார்.

இந்நிலையில், டெல்லி பாஜ தலைமையின் அவசர அழைப்பின்பேரில் நேற்றிரவு தனி விமானம் மூலமாக அண்ணாமலை டெல்லிக்குப் புறப்பட்டு சென்றுள்ளார். அவர் இன்று பிரதமர் மோடி உள்பட பாஜ முக்கிய தலைவர்களை சந்தித்து பேசுகிறார். இதைத் தொடர்ந்து, அவருக்கு அக்கட்சியில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது, தமிழக பாஜ தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: