சென்னை: தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நான்காம் கட்டமாக தஞ்சாவூரில் பரப்புரையை தொடங்குகிறார். தமிழகம் முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிக்கிறார். இந்த தொடர் பிரச்சாரத்தை முதல்வர் மு.க. ஸ்டாவின் மார்ச் 31-ம் தேதி திருவாரூரில் தொடங்கிய நிலையில், நான்காம் கட்ட பரப்புரையை ஏப்ரல் 10-ம் தேதி தஞ்சாவூரில் தொடங்குகிறார்.
ஏப்ரல் 10ம் தேதி தஞ்சையில் மாலை 5 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபடுகிறார். திருவையாறு, தஞ்சை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, பாபநாசம், திருவிடைமருதூர், கும்பகோணம் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்.
ஏப்ரல் 11-ம் தேதி புதுகோட்டையில் மாலை 4 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் வாக்கு சேகரிப்பில் ஈடுபடவுள்ளார். கந்தர்வக்கோட்டை, விராலிமலை, புதுக்கோட்டஒ, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்.
தொடர்ந்து மாலை 7 மணிக்கு திருப்பத்தூரில் முதல்வர் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார். காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை தொகுதி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபடவுள்ளார்.
ஏப்ரல் 12-ம் தேதி மாலை 4 மணிக்கு பரமக்குடியில் நடைபெறும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் முதல்வர் பங்கேற்கிறார். அங்கு பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்.
தொடர்ந்து மாலை 7 மணிக்கு தூத்துக்குடியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் பங்கேற்கிறார். இந்த பொதுக்கூட்டத்தில் விளாத்திகுளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், திருவைகுண்டம், ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்.
மேற்குறிப்பிட்டுள்ள இடங்களில் பிரச்சாரத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்த நேரத்திற்குள் செல்ல வேண்டியுள்ளதால் காலத்தின் அருமை கருதி எக்காரணம் கொண்டும் கழகத் தோழர்கள் வழியில் வேறு எவ்வித நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்திட வேண்டாம் எனவும், கழக முன்னணியினர் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் தலைவர் அவர்கள் தங்கும் இடத்திற்கு வருவதை தவிர்த்து, பிரச்சாரக் கூட்டத்திற்கு நேரடியாக வருகை தர வேண்டுமெனவும் திராவிட முன்னேற்றக்கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.
