திருவண்ணாமலை, ஏப்.7: திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளராக அமைச்சர் எ.வ.வேலு மீண்டும் போட்டியிடுகிறார். இவர், ஏற்கனவே தண்டராம்பட்டு தொகுதியில் 1984, 2001, 2006 தேர்தல்களில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக சிறப்பாக பணியாற்றி மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளார். மேலும், தொகுதி மறுசீரமைப்பு காரணமாக, கடந்த 2011, 2016 மற்றும் 2021 தேர்தல்களில் திருவண்ணாமலை தொகுதியில் வெற்றிபெற்று திருவண்ணாமலை தொகுதியின் வளர்ச்சிக்காக பாடுபட்டுள்ளார். அதோடு, 2006-2011ல் உணவுத்துறை அமைச்சராக பணியாற்றி, பொது விநியோக திட்டத்தின் சிறப்பான செயல்பாட்டுக்காக உச்சநீதிமன்றத்தின் பாராட்டை பெற்றார். மேலும், தற்போது பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக மாநிலம் முழுவதும் பல்வேறு சாதனை திட்டங்களை நிறைவேற்றி அனைத்துத்தரப்பு மக்களின் பாராட்டையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில், திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் எ.வ.வேலு, திருவண்ணாமலை ஆர்டிஓ அலுவலத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி செல்வத்திடம் நேற்று பகல் 12.30 மணி அளவில் வேட்புமனு தாக்கல் செய்தார். மேலும், திமுக மாற்று வேட்பாளராக பொறியாளர் எ.வ.குமரன் மனுதாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து, அமைச்சர் எ.வ.வேலு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது: திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு திமுக வேட்பாளராக மதசார்பற்ற கூட்டணி தலைவர்களின் ஒத்துழைப்புடன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறேன். நிச்சயம் வெற்றிபெறுவேன். மனித வாழ்க்கையே நம்பிக்கைத்தான். அந்த நம்பிக்கையில் வெற்றிபெறுவேன்.
தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியில் மக்களுக்கு தேவையான பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறார். மக்கள் அதனால் பயன்பெற்றுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கனவே நாங்கள் 6 பேர் வெற்றிபெற்றோம். இந்த தேர்தலில் திமுக போட்டியிடும் 7 தொகுதிகள் மற்றும் தோழமை கட்சியான தேமுதிக பொட்டியிடும் ஒரு தொகுதி உள்பட 8 தொகுதிகளிலும் நாங்கள் நிச்சயம் வெற்றிபெறுவோம். திருவண்ணாமலை தொகுதிக்கு வேண்டிய பணிகளை அரசிடம் அணுகி, எந்தெந்த திட்டங்களை நிறைவேற்ற முடியுமோ அந்த திட்டங்களை எல்லாம் நிறைவேற்றியிருக்கிறேன். இன்னும் நிறைவேற்ற வேண்டிய பணிகள் நிறைய இருக்கிறது. மீண்டும் வெற்றிபெற்றதும் இன்னும் உள்ள பணிகளை நிறைவேற்றுவேன்.
தொடர் நடவடிக்கைகள் மூலம்தான் திட்டங்களை நிறைவு செய்ய முடியும். ஏற்கனவே 5 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறேன். தொடர்ந்து இன்னும் 5 ஆண்டுகள் இருந்தால் ஏனைய பணிகளை நிறைவேற்ற வாய்ப்பாக இருக்கும். மக்கள் எண்ணங்களை புரிந்துகொண்டு பணியாற்றுவதற்கு, மக்களுக்கு தொண்டு செய்வதற்கு இங்கு நின்றிருக்கிறேன். திருவண்ணாமலை என்னுடைய சொந்த தொகுதி. தோழமை கட்சி தலைவர்கள் ஒரே உணர்வுடன் டெல்லி தோற்க வேண்டும் தமிழ்நாடு வெல்ல வேண்டும் என்ற தாரக மந்திரத்தை மனதில் கொண்டு இந்த தேர்தல் நடக்கிறது. எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் நிச்சயம் 8 தொகுதிகளில் வெற்றிபெறுவோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அப்போது, தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.தரன், மாநகர செயலாளர் கார்த்திவேல்மாறன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், துணை செயலாளர் பிரியா விஜயரங்கன், அருணைவெங்கட், வழக்கறிஞர் அணி இரா.கார்த்திகேயன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் குணசேகரன், தேமுதிக மாவட்ட செயலாளர் வி.எம்.நேரு, விசிக மாவட்ட செயலாளர் நியூட்டன், மதிமுக மாவட்ட செயலாளர் சீனிகார்த்திகேயன், சிபிஎம் மாவட்ட செயலாளர் ப.செல்வம், சிபிஐ மாவட்ட செயலாளர் திருமலை மற்றும் முஸ்லீம் லீக், மமக, மநீம, தலித் விடுதலை இயக்கம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். தொடர்ந்து, திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான எ.வ.வேலு நேற்று மாலை காட்டாம்பூண்டி ஊராட்சியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
