திருவண்ணாமலை, ஏப்.7: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் நேற்றுடன் நிறைவடைந்தது. அதையொட்டி, தாமரை குளத்தில் பாலிகைவிடுதல் நிகழ்ச்சி நடந்தது. அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய விழாவான பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கடந்த 2ம் ேததி தொடங்கியது. அதையொட்டி, அன்று காலை அண்ணாமலையார் கோயில் சுவாமி சன்னதியில், சுவாமிக்கும் அம்மனுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து, அன்று இரவு 8 மணி அளவில், கோயில் கொடிமரம் அருகே உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் எழுந்தருளளும், மாலை மாற்றும் வைபவமும் நடந்தது. பின்னர், இரவு 11 மணி அளவில் திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கல்யாண உற்சவமும், தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி மாட வீதியுலா நடைபெற்றது. விழாவின் தொடர்ச்சியாக, கடந்த 3ம் தேதி கீழ்நாத்தூரில் மருவுண்ணல் மண்டகபடி, 4ம் தேதி நலங்கு உற்சவம், 5ம் ேததி ஊஞ்சல் உற்சவம் ஆகியவை நடந்தது. விழாவின் நிறைவாக, நேற்று பகல் 12 மணியளவில் தாமரை குளத்தில் பாலிகைவிடுதல் நிகழ்ச்சி நடந்தது.
தாமரை குளத்தில் தண்ணீர் மாசுபட்டு, பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது. எனவே, குளத்துக்கு அருகே அமைக்கப்பட்டிருந்த தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டு பாலிகை விடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது, குளத்தில் கரையில் உள்ள மண்டபத்தில், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன் அலங்கார ரூபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
