சேத்துப்பட்டு, ஏப்.3: சேத்துப்பட்டு அருகே பச்சையம்மன் பவுர்ணமி ஊஞ்சல் தாலாட்டு நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சேத்துப்பட்டு அடுத்த இந்திரவனம் பச்சையம்மன் கோயிலில் பங்குனி மாத பவுர்ணமியையொட்டி ஊஞ்சல் தாலாட்டு நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.இதையொட்டி காலை மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. இரவு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பச்சையம்மனை கோயில் வளாகத்தில் உள்ள ஊஞ்சலில் அமர்த்தி தாலாட்டு நிகழ்ச்சி நடந்தது. அப்போது அம்மனுக்கு உகந்த பக்தி பாடல்கள் பாடப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, பச்சையம்மன் நான்கு மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் சேத்துப்பட்டு, வேலூர், ஆரணி, போளூர், செஞ்சி உள்ளிட்ட நகரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். இதையடுத்து கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை இந்திரவனம் பச்சையம்மன் கோயில் அறங்காவலர் குழுவினர், கிராம பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.
