தண்டராம்பட்டு, ஏப்.6: தண்டராம்பட்டு அருகே சாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் திரண்டனர். திருவண்ணாமலை மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்குவது சாத்தனூர் அணை. பொன்விழா கண்ட இந்த அணை 119 அடி உயரம் கொண்டது. அணை முழு கொள்ளளவு எட்டியதனால் விவசாய பாசனத்திற்காக திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மாவட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்ததினால் விவசாய பயன்பாட்டிற்காக சாத்தனூர் அணையில் இருந்து வலது புறம், இடதுபுறம், தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 550 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
இதனால் சாத்தனூர் அணை 97 அடியாக நீர்மட்டம் குறைந்துள்ளது. இந்நிலையில், நேற்று விடுமுறை தினம் என்பதனால் சாத்தனூர் அணையில் உள்ள ஆதாம் ஏவாள் பூங்கா, சிறுவர் பூங்கா, நீச்சல் குளம், முதலைப் பண்ணை, ராக்கெட் பார்க், அறிவியல் பார்க் உள்ளிட்ட இடங்களில் திரளான சுற்றுலா பயணிகள் திரண்டு சுற்றிப் பார்த்து மகிழ்ந்தனர். விவசாயத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீரில் இளைஞர்கள் குளித்து மகிழ்ந்தனர்.
