சோழவந்தான் : சோழவந்தான் அருகே பன்னியான் கிராமத்தைச் சேர்ந்தவர் கஜேந்திரன் மனைவி செல்வி என்ற செல்வ பாக்கியம்(48). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், வீட்டில் இருக்காமல் சோழவந்தான் மற்றும் மேலக்கால் பகுதிகளில் சாலையில் சுற்றித்திரிவார். அழுக்கு உடையுடன், தானாக பேசிக் கொண்டும், பெரிய பைகளை சுமந்து கொண்டும், கடைகள் முன் உள்ள குப்பைகளை சுத்தம் செய்து கொண்டும் இருப்பது இவரது வழக்கம்.
யாரையும் தொந்தரவு செய்யாமல், தாமாக உதவி செய்பவர்களிடம் பணம் பெற்று கிடைப்பதை சாப்பிட்டு வாழ்ந்து வருகிறார். மேலும், தனக்கு பிறர் கொடுக்கும் பணத்தில் பிஸ்கட், வடை போன்றவற்றை வாங்கி சாலையில் திரியும் நாய்களுக்கும் உணவளிப்பார். இந்நிலையில் நேற்று மேலக்கால் பாலம் அருகே ஒரு சில்வர் காப்பு மற்றும் ரூ.2800 பணத்துடன் கட்டைப்பை கிடந்துள்ளது. இதை எடுத்த செல்வி, சோழவந்தான் காவல் நிலையத்திற்கு வந்து எஸ்.ஐ ஜெயக்குமாரிடம் ஒப்படைத்தார்.
அவரது நேர்மையை பாராட்டி அவருக்கு கதராடை அணிவித்து எஸ்.ஐ மற்றும் காவலர்கள் வாழ்த்தினர். பின்னர் விசாரணை செய்து, பணத்தை தொலைத்த மீன் வியாபாரியான மேலமட்டையான் ராஜ்குமார் (32) என்பவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
சாலையில் கிடைத்த பணம், பொருளை தனதாக்கிக்கொள்ளாமல் காவல் நிலையத்தில் ஒப்படைத்த அவரது குணத்தை பார்க்கும்போது, மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறுவது தவறு என்றே தோன்றுகிறது. சாலைகளில் சுற்றும் செல்வியை, மாவட்ட நிர்வாகம் உரிய காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.
