தமிழக அரசின் சாதனை வைகை ஆறு,கிருதுமால் நதி குறுக்கே பாலம்

*25 கிராமமக்கள் நன்றி தெரிவிப்பு

திருப்புவனம் : வைகை ஆறு மற்றும் கிருதுமால் நதி குறுக்கே உயர் மட்ட பாலம் கட்டப்பட்டதால் 25 கிராம மக்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

திருப்புவனம் சுற்று வட்டார கிராம பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வந்த லாடனேந்தல், பெத்தானேந்தல் இடையே வைகை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலமும், பழையனூர், ஓடாத்தூர் இடையே கிருதுமால் நதியின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்ட வேண்டும் என்பதும் கோரிக்கையாக இருந்து வந்தது. தமிழக அரசின் முயற்சியால் நான்கு ஆண்டுகளில் இரண்டு பாலங்களும் கட்டப்பட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் பயன்படுத்தி வருகின்றனர்.

பெத்தானேந்தல், மணல்மேடு கிராம மக்கள் லாடனேந்தல் பெத்தானேந்தல் இடையே வைகை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர். தமிழக அரசின் நடவடிக்கையால் ரூ.16.92 கோடி மதிப்பீட்டில் நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

374 மீட்டர் நீளம் 9.95 மீட்டர் அகலம் 19 தூண்களுடன் அமைய உள்ள உயர்மட்டப் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் கட்டப்பட்டுள்ளதால் லாடனேந்தல், பெத்தானேந்தல் மணல்மேடு, கணக்கன்குடி, ஏனாதி, சடங்கி, கருங்குளம், பாப்பாகுடி உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

வைகை ஆற்றில் தண்ணீர் வரும் காலங்களில் 10 கி.மீ சுற்றி திருப்புவனம் வரவேண்டிய நிலையில் தற்போது இந்தப் பாலம் கட்டப்பட்டதால் 2 கி.மீ பயணித்தால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், மதுரைக்கு வேலைக்குச் செல்வோர் பயனடைந்து வருகின்றனர். 10 கிராம மக்களும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல பழையனூர் ஓடாத்தூர் இடையே செல்லும் கிருதுமால் நதியில் தண்ணீர் ஓடும் காலங்களில் மக்கள் ஆற்றை கடக்க முடியாது. பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் 20 கிமீ சுற்றித்தான் பழையனூருக்கு வர முடியும். கால் நூற்றாண்டு காலமாக அப்பகுதி மக்கள் கோரிக்கையுடன் போராடி வந்தனர்.

பழையனூர் வல்லாரேந்தல் இடைய கிருதுமால் நதியின் குறுக்கே உயர் மட்டப் பாலம் கட்டியதால் 12கிராமங்கள் பயனடைகின்றன. கிருதுமால நதியில் செப்டம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை தொடர்ந்து தண்ணீர் செல்லும்.

கிருதுமால் நதியில் தண்ணீர் அதிகரிக்கும். இதனால் சிவகங்கை மாவட்ட எல்லையிலுள்ள பழையனூரையும், விருதுநகர் மாவட்ட கிராமங்களுக்கும் இடையே கிருதுமால் நதி வருடத்தில் மழை காலங்களில் நதியை கடந்து செல்லும் வல்லாரேந்தல் ஓடாத்தூர், சிறுவனூர், எஸ்.வாகைகுளம், சேந்தநதி, முக்குளம் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பால் பஸ்கள் வராது.

ஆற்றின் கரையின் இருபுறமும் ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படும் நிலை உள்ளது. உயர்மட்டப்பாலம் கட்ட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. தமிழக அரசு உயர்மட்ட பாலம் கட்ட உத்தரவிட்ட நிலையில், உடனடியாக தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை நபார்டு கிராமச்சாலை திட்டத்தில் 3 கோடியே 57 லட்சத்து 53 ஆயிரம் மதிப்பீட்டில் பழையனூர் வல்லாரேந்தல் கிருதுமால் நதி குறுக்கே உயர் மட்ட பாலம் கட்டப்பட்டு கடந்த பல மாதங்களாக மக்கள் பயன்பாட்டில் உள்ளது. இதனால் விருதுநகர், சிவகங்கை இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த 12 கிராம மக்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: