காலை உணவு திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 1393 பள்ளிகளில் 76,339 மாணவ, மாணவிகள் பயன்

கிருஷ்ணகிரி : கிருஷண்கிரி மாவட்டத்தில், காலை உணவு திட்டத்தின் கீழ், 1393 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 76,339 மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். தமிழக அரசு, பள்ளிக்கல்வித்துறை சார்பாக இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம், நான் முதல்வன் திட்டம், கல்லூரிக் கனவு, நம் பள்ளி நம் பெருமை, புதுமை பெண் திட்டம், மாணவர் மனசு மற்றும் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

நகர பகுதிகளிலும், கிராம பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுவதால், பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடாமல் இருக்கும் நிலையை தவிர்க்கவும், குடும்ப சூழல் காரணமாக இருக்கும் குழந்தைகள் காலை உணவை தவிர்ப்பதை கருத்தில் கொண்டு, தமிழக அரசால் அரசு பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை, கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது.

தொடர்ந்து 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி, முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்தப்பட்டது. பின்னர், பள்ளிக்கல்வியை மேலும் பரவலாக்கவும், கற்றலை இனிமையாக்கவும், அனைத்து குழந்தைகளும் பசியின்றி கல்வியறிவு பெற்றிடவும், ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளிலும் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுககு இத்திட்டத்தினை விரிவுப்படுத்தி, கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ம் தேதியன்று முதற்கட்டமாக துவக்கி வைத்தும், 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ம் தேதியன்று விரிவாக்கமும் செய்யப்பட்டது.

இந்த திட்டம் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 1358 ஊரகப் பள்ளிகள் மற்றும் 35 பேரூராட்சி பள்ளிகள் என மொத்தம் 1393 பள்ளிகளில், 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் 76,339 மாணவ, மாணவிகள் அனைவருக்கும் பள்ளி வேலை நாட்களிலும் காலை உணவு வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் திங்கட்கிழமை சேமியா, காய்கறி சாம்பார், செவ்வாய்கிழமை ரவா காய்கறி சாம்பார், புதன்கிழமை வெண் பொங்கல், காய்கறி சாம்பார், வியாழக்கிழமை அரிசி உப்புமா, காய்கறி சாம்பார், வெள்ளிக்கிழமை கோதுமை ரவா, காய்கறி சாம்பார் ஆகியவை காலை உணவாக வழங்கப்படுகிறது.

மாணவ, மாணவிகள் பசியின்றி பள்ளிக்கு வருதல், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமிலிருத்தல், ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்தல், வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் ஆகியவற்றை குறிக்கோளாகக் கொண்ட முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதோடு, சத்தான உணவினை வழங்குவதன் காரணமாக, பள்ளிகளில் மாணவர்களின் வருகையும் அதிகரித்துள்ளது. வேலைக்கு செல்லும் தாய்மார்கள், காலை உணவு தயாரிக்கும் நேரம் மற்றும் பொருட் செலவு மீதமாவதோடு மட்டுமல்லாமல், தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் படிப்புத்திறன் அதிகரித்துள்ளதாக பெருமிதத்துடன் கூறுகின்றனர்.

Related Stories: