திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் 28ம் தேதி 12,076 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி

* 12 தாலுகாக்களில் நடக்கிறது

* முன்னேற்பாடுகளை கலெக்டர் ஆய்வு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் 12,076 வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு முதற்கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு வரும் 28ம் தேதி நடக்கிறது.தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி ஒரே கட்டமாக மாநிலம் முழுவதும் நடைபெற உள்ளது.

அதையொட்டி, வரும் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. அடுத்த மாதம் 6ம் தேதி வரை மனுக்கள் பெறப்படும். அதைத்தொடர்ந்து, 7ம் தேதி வேட்புமனுக்கள் பரீசீலனை நடைபெறும். வரும் 9ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

அதையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை, செங்கம், கலசபாக்கம், கீழ்ெபன்னாத்தூர், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளில், 2516 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதோடு, 8 சட்டமன்ற தொகுதிகளில் பணிபுரிய அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் 12,076 பேர் வாக்குச்சாவடி அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலா 4 பேர் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், 20 சதவீதம் பேர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுவார்கள்.

இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி, வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பணி ஒதுக்கீடு கணினி குலுக்கல் முறையில் நேற்று நடந்தது. கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தர்ப்பகராஜ் மற்றும் தேர்தல் பொது பார்வையாளர் சஜேந்திரசிங் ஆகியோர் முன்னிலையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மேலும், தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பணி நியமன ஆணை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் இன்று முதல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு மூன்று கட்டங்களாக பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, முதற்கட்ட பயிற்சி வகுப்பு வரும் 28ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, செங்கம், தண்டராம்பட்டு, கீழ்பென்னாத்தூர், கலசபாக்கம், போளூர், செய்யாறு, ஆரணி, வந்தவாசி, சேத்துப்பட்டு, வெம்பாக்கம், ஜவ்வாதுமலை ஆகிய 12 தாலுகாக்களில் இப்பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

இந்நிலையில், திருவண்ணாமலை நாச்சிப்பட்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், திருவண்ணாமலை தாலுகா அளவில் நடைபெறும் பயிற்சி வகுப்புக்கான மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை கலெக்டர் தர்ப்பகராஜ், தேர்தல் பொது பார்வையாளர் சஜேந்திரசிங் ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.

இப்பயிற்சி வகுப்பில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளும் முறை, இரண்டு பேலட் யூனிட்களை, கட்டுப்பாட்டு இயந்திரத்துடன் இணைப்பது எப்படி, படிவங்களை முறையாக பூர்த்தி செய்தல், மாதிரி வாக்குப்பதிவு நடத்துதல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைத்தல் போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.அப்போது, டிஆர்ஓ ராம்பிரதீபன், ஆர்டிஓ செல்வம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) அன்பழகன், தேர்தல் பிரிவு தாசில்தார் தியாகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: