மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், பா.ஜ மூத்த தலைவருமான சுவேந்து அதிகாரி, தென் கொல்கத்தாவில் அமைந்துள்ள, மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த பவானிப்பூர் தொகுதிக்கான பாஜ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதியில் தான் முதல்வர் மம்தா போட்டியிட உள்ளார். இதையடுத்து அந்த தொகுதியில் நேற்று சுவேந்து அதிகாரி தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். பவானிப்பூர் தேர்தல் அலுவலகத்தைத் திறந்து வைத்து, ஒரு பேரணியையும் நடத்தினார். தனது பிரசாரத்தின் முதல் நாளில் செய்தியாளர்களிடம் பேசிய சுவேந்து அதிகாரி, ‘‘பேரணிக்குக் கிடைத்த வரவேற்பைக் கண்டு நான் மிகுந்த உற்சாகமடைந்தேன். பவானிப்பூர் மக்கள் என்னை ஏற்றுக்கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன். எனக்கு இங்கு திரண்ட மக்கள் கூட்டம் அசாதாரணமானது. ஊடுருவல்காரர்களுக்கும் ஊழலுக்கும் தலைவராக இருப்பவர் இந்த தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டும். முதல்வர் மம்தாவின் மருமகனால் (திரிணாமுல் காங்கிரஸின் தேசியப் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜியைக் குறிப்பிட்டு) சிறு கடைக்காரர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்’ என்று தெரிவித்தார்.
அதிர்ரஞ்சன் சவுத்ரியின் ஆசை
கடந்த மக்களவையில் எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர் அதிர் ரஞ்சன் சவுத்திரி. ஆனால் 2024 மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்தார். இதனால் மீண்டும் மேற்குவங்க அரசியலுக்கு திரும்ப அவர் விரும்புகிறார். காங்கிரஸ் மேலிடம் அனுமதி அளித்தால் பஹராம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து போட்டியிட விரும்புவதாகவும் அவர் கூறினார். 1996ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் அவர் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள நபக்ராம் சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்றார்.
