பு துவையில் புதிய திட்டங்களுக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்காதது உள்பட பல்வேறு உரசலுக்கு இடையே ஆளும் கூட்டணி தனது 5 ஆண்டு கால ஆட்சியை பூர்த்தி செய்கிறது. பல்வேறு போராட்டங்களுக்கு இடையே ஆட்சி நடத்தி வந்த முதல்வர் ரங்கசாமி, மாநில அந்தஸ்து மற்றும் லாட்டரி அதிபர் மகன் சார்லஸ் லஜக கட்சியை புதுவையில் இருந்து வெளியேற்றினால் கூட்டணியை தொடர்வோம் என உறுதியாக கூறிவிட்டார். அதிர்ச்சியடைந்த மாநில பாஜ தலைவர் ராமலிங்கம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் செல்வம் மற்றும் மேலிட பொறுப்பாளர் மன்சுக் மாண்டவியா ஆகியோர் இது தொடர்பாக கடந்த 3 நாட்களாக டெல்லியில் முகாமிட்டு ஆலோசனை நடத்தினர்.
பின்னர், பிரதமர் மோடி, அமித்ஷா தலைமையில் நடந்த பார்லிமென்டரி போர்டு கமிட்டி கூட்டத்தில், ‘‘லஜகவை கூட்டணியில் இருந்து கழற்றி விட முடியாது. கடைசி கட்ட சமரசம் செய்து பார்ப்போம். இல்லையென்றால் பாஜ, 30 தொகுதிகளிலும் நிற்க வேண்டிய வேலையை பாருங்கள்’’ என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம். அதற்கான வேட்பாளர் பட்டியலையும் தயார் செய்துவிட்டார்களாம். குறிப்பாக ராஜ்ய சபா எம்பியாக உள்ள செல்வகணபதிக்கு லாஸ்பேட்டையில் போட்டியிட உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாம். அதற்கான வேலையில் அவரும் இறங்கி விட்டார். இன்றைக்குள் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி என்பது உறுதியாக வேண்டும். இல்லையென்றால் 30 தொகுதியிலும் பாஜ தனித்து போட்டியிடும் நிலை ஏற்படும் என அக்கட்சி வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளது.
