×

தனித்து விடப்பட்ட சக்திகளை ஒருங்கிணைத்து உருவாகும் 5வது அணி சசிகலா- ராமதாஸ் கூட்டணி இன்று அறிவிப்பு?.. அதிமுக- பாஜ வாக்குகளை பிரிக்க திட்டம்

தமிழக சட்டப் பேரவைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசியல் களம் அனல் பறக்க தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என நான்கு முனை போட்டி உருவாகியுள்ளது. இப்படி பரபரப்பாக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவில் இருந்து ஓரம் கட்டப்பட்ட சசிகலா என்ன முடிவெடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் எழுந்தது. அதிமுகவில் மீண்டும் இணைக்கவே முடியாது என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறியதால், கடந்த பிப்ரவரி 24ம் தேதி கமுதியில் நடந்த ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாளில் சசிகலா புதிய கட்சியை தொடங்கினார். அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா உருவங்கள் பதித்த கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறம் கலந்த கட்சி கொடியை அறிமுகம் செய்தார். கடந்த வாரம் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்று கட்சியின் பெயரை அறிவித்தார். கட்சிக்கு தென்னந்தோப்பு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து இந்த தேர்தலில் தன்னை நெருக்கடிக்கு உள்ளாக்கிய எடப்பாடி பழனிசாமி, டிடிவி.தினகரன், பாஜ உள்ளிட்ட முக்கிய புள்ளிகளுக்கு நெருக்கடி தரும் வகையில் ராமதாசுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட சசிகலா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் நிலவி வருகிறது. பாமகவின் சின்னம், பெயர் அன்புமணிக்கே சொந்தம் என தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், இதற்கு எதிராக சட்டப் போராட்டத்தை ராமதாஸ் நடத்தி வருகிறார். அன்புமணி தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த நிலையில், ராமதாசும் இந்த தேர்தலில் போட்டியிட தயாராகி வருகிறார். திமுக கூட்டணியில் இணையலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்தது. ஆனால், விசிக எதிர்ப்பு தெரிவித்ததால், ராமதாசின் இந்த முயற்சி பலனளிக்கவில்லை. அன்புமணி இருப்பதால் அதிமுக கூட்டணி பக்கம் போக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

விஜய்யின் தவெகவுடன் ராமதாஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாக அண்மையில் பேச்சு எழுந்தது. ஆனால், இந்த தகவலை தவெக மறுத்தது. ராமதாசின் அடுத்த கட்ட முடிவு என்னவாக இருக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்ற நிலையில், தைலாபுரத்தில் நடந்த ராமதாஸ்- சசிகலாவின் திடீர் சந்திப்பு தமிழக அரசியல் களத்தில் பல்வேறு ரகசியங்களை கொண்டதாக பார்க்கப்படுகிறது. எந்த கூட்டணிக்கும் செல்ல முடியாத நிலையில், தனித்துவிடப்பட்ட சக்திகளை ஒருங்கிணைத்து ஒரு அணியை உருவாக்குவது குறித்து முக்கிய முடிவுகளை இருவரும் எடுத்ததாக கூறப்படுகிறது. அதாவது, ‘துரோகங்களை வீழ்த்துவது’ என்ற ஒற்றை இலக்கை முன்னிறுத்தி இந்த சந்திப்பு நடந்ததாக பேசப்படுகிறது. சசிகலாவும் அதிமுகவில் தனக்கான இடத்தை இழந்து தனித்து விடப்பட்டுள்ள நிலையில் ராமதாசுடன் அவர் கைகோர்த்திருப்பது என்பது தென் மாவட்ட முக்குலத்தோர் வாக்குகளையும், வடமாவட்ட வன்னியர் வாக்குகளை ஒரு புள்ளியில் இணைக்கும் முயற்சி என்றே பார்க்கப்படுகிறது. “சசிகலாவின் இந்த முயற்சி என்பது, அதிமுகவுக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுகவின் கோட்டைகளாக கருதப்படும் பகுதிகளில் வாக்குகளை பிரிப்பதன் மூலம் அதிமுகவின் வெற்றி வாய்ப்பை தட்டி பறிப்பதோடு, பாஜவின் வாக்கு வேட்டைக்கும் இது முட்டுக்கட்டையாக அமையும் என்று சசிகலா கருதுகிறாராம். அதுமட்டுமல்ல, ராமதாஸ்- சசிகலாவின் இந்த நகர்வு என்பது வெறும் தேர்தல் கணக்கு மட்டுமல்ல தங்களை ஓரங்கட்டியவர்களுக்கு தரும் பதிலடியாக இருக்கும் என்பதே அவர்களின் திட்டமாக உள்ளது. வட மாவட்டங்களில் பாமவுக்கு வாக்கு வங்கி இருந்தாலும், தற்போது ராமதாசுக்கு என தனித்த செல்வாக்கும் ஆதரவாளர் வட்டமும் இருக்கிறது. மேலும் மன்னார்குடி, தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா பகுதிகளிலும், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட சில பகுதிகளிலும் சசிகலாவுக்கு என ஆதரவாளர் வட்டம் இருக்கிறது. இதனால் வடக்கே வன்னியர், தெற்கே தேவர் சமூக வாக்குகளை உடைக்கும் வகையில் கூட்டணி சேரலாம் என சசிகலாவின் திட்டத்தை ராமதாஸ் ஏற்றுக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

இதையடுத்து, தமிழக சட்டப் பேரவை தேர்தலில் 4 முனை போட்டி நிலவி வந்த நிலையில், தற்போது 5வது அணி உருவாகியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். 5வது அணியாக உருவெடுத்துள்ள ராமதாஸ் -சசிகலா கூட்டணியானது சட்டமன்ற தேர்தலில் 100 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. வடக்கு, மேற்கு மாவட்டங்களில் ராமதாஸ் தரப்பு போட்டியிடுவது என்றும், தெற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் சசிகலா கட்சி போட்டியிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம். சசிகலா-ராமதாஸ் கூட்டணி அறிவிப்பை இன்று வெளியாகலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. புதிதாக உருவாகியுள்ள 5வது அணி வரும் தேர்தலில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Tags : Sasikala ,Ramadoss ,AIADMK ,BJP ,Tamil Nadu Legislative Assembly ,Tamil Nadu ,DMK ,Thaveka ,Naam Tamilar ,AIADMK… ,
× RELATED 49 தலைப்புகளில் 462 பக்க தேர்தல் அறிக்கை;...