விழுப்புரம் தனியார் மண்டபத்தில் விவசாயிகள் வாழ்வாதார முன்னேற்ற கட்சி தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாநில தலைவர் பரிமளம் மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் குத்துவிளக்கேற்றி, புதிய கட்சியை தொடங்கி வைத்து, கொடியையும் அறிமுகம் செய்தனர். அப்போது அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் வெறும் 3 சதவீத அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி, பல சலுகைகளை பெறுகின்றனர். ஆனால், விவசாயிகள் பல லட்சம் மதிப்புள்ள சொந்த நிலத்தில் பயிரிட்டு, ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் தான் சம்பாதிக்க முடிகிறது. பலர் விவசாயத்தை கைவிடுகின்றனர். இதனால் தமிழகத்தில் உள்ள 300க்கும் மேற்பட்ட சங்கங்களின் ஒருங்கிணைப்பில் புதிய கட்சியை தொடங்குகிறோம்.
தமிழகத்தில் பசுமை புரட்சியை ஏற்படுத்துவதே கட்சியின் கொள்கை. அதற்காக 3 மாதங்களுக்குள், ஒரு கோடி மரக்கன்றுகள் நடப்படும். விவசாயிகளை வஞ்சிக்கும் அரசு துறை அதிகாரிகளை கண்காணித்து, லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலம் முழுவதும் 2 கோடி விவசாய குடும்பங்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை வருமானம் ஈட்டுவதற்கு ஆலோசனை, உதவிகளை செய்வோம். வரும் தேர்தலில் 50 இடங்களில் போட்டியிடுவது அல்லது விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கு ஆதரவளிப்பது என முடிவெடுத்துள்ளோம்.இவ்வாறு அவர் தெரிவித்தனர்.
