புதுடெல்லி: மேற்கு ஆசியா நிலவரம் தொடர்பாக பிரான்ஸ், மலேசியா, ஓமன் ஆகிய 3 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். ஈரானுக்கு எதிரான அமெரிக்க, இஸ்ரேலிய படைகளின் மேற்கு ஆசியா போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தற்போது அங்குள்ள எண்ணெய், எரிவாயு மையங்கள் மீது இருதரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவதால் மோசமடைந்து வரும் நிலைமை குறித்த கவலைகள் அதிகரித்த நிலையில் பிரதமர் மோடி, ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.
ஈரானின் பதிலடி தாக்குதலில் கடுமையாக பாதிக்கப்பட்ட வளைகுடா நாடுகளில் ஓமனும் ஒன்று. ஓமன் சுல்தானுடனான உரையாடல் குறித்து பிரதமர் மோடி தனது சமூக ஊடக பதிவில், ‘‘பதற்றத்தை தணிப்பதற்கும், அமைதி, ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தை நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம். இந்தியாவும் ஓமனும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பாதுகாப்பான மற்றும் தடையற்ற கப்பல் போக்குவரத்திற்கு ஆதரவளிக்கின்றன. இப்போரில், ஓமனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மீறப்பட்டதை இந்தியா மீண்டும் ஒருமுறை கண்டிக்கிறது. அத்துடன் இந்திய மக்கள் உட்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பாக தாய்நாடு திரும்புவதற்கு வழிவகை செய்த ஓமனின் முயற்சிகளை இந்தியா பாராட்டுகிறது’’ என கூறி உள்ளார்.
பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடனான பேச்சுவார்த்தை குறித்து பிரதமர் மோடி கூறுகையில், ‘‘பதற்றத்தை தணிப்பதற்கும், பேச்சுவார்த்தை ராஜதந்திரத்திற்கு திரும்புவதற்கும் அவசர தேவை இருப்பதை இந்தியாவும் பிரான்சும் வலியுறுத்துகின்றன. பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் அமைதி, ஸ்திரத்தன்மையை மேம்படுத்த எங்களின் நெருங்கிய ஒருங்கிணைப்பை தொடர நாங்கள் ஆவலுடன் உள்ளோம்’’ என்றார்.
மலேசிய பிரதமர் இப்ராகிமுடனான பேச்சுவார்த்தை குறித்து பிரதமர் மோடி, ‘‘மேற்கு ஆசியாவில் நிலவும் கவலைக்குரிய நிலைமை குறித்து நாங்கள் விவாதித்தோம். பேச்சுவார்த்தை, ராஜதந்திரம் மூலம் பதற்றத்தை தணிக்கவும், அமைதி, ஸ்திரத்தன்மையையும் மீட்டெடுப்பதற்கும் எங்களின் பரஸ்பர உறுதிபாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினோம்’’ என கூறி உள்ளார்.
