தர்மடம் தொகுதியில் கேரள முதல்வர் மனுத்தாக்கல்

திருவனந்தபுரம்: கண்ணூர் மாவட்டம் தர்மடம் தொகுதியில் முதல் ஆளாக கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். கேரளாவில் தொடர்ந்து 10 வருடங்கள் முதல்வராக இருந்தவர் என்ற சாதனையை பினராயி விஜயன் படைத்துள்ளார். தொடர்ச்சியாக மூன்றாவது முறையும் ஆட்சியமைப்போம் என்றும் இடதுசாரி கூட்டணியினர் உறுதியுடன் கூறுகின்றனர்.

இந்நிலையில் கண்ணூர் மாவட்டத்திலுள்ள தர்மடம் தொகுதியில் போட்டியிடும் கேரள முதல்வர் பினராயி விஜயன் முதல் நாளாக நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். தலச்சேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி சச்சின் கிருஷ்ணா முன்னிலையில் அவர் தன்னுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன் சபாநாயகர் ஷம்சீர், முன்னாள் அமைச்சர் ஜெயராஜன், சிபிஎம் கண்ணூர் மாவட்ட செயலாளர் ராஜேஷ் ஆகியோர் இருந்தனர். வேட்பு மனுவுக்கு முன்னதாக வாகன பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. தர்மடம் தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பினராயி விஜயன் வேட்பு மனு தாக்கல் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதற்கு முன்பு இவர் 3 முறை கூத்துபறம்பு தொகுதியிலும், ஒரு முறை தளிப்பறம்பு தொகுதியிலும் போட்டியிட்டார்.

கேரள முதல்வர் சொத்து மதிப்பு ரூ.1 கோடி
தர்மடம் தொகுதியில் போட்டியிடும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது வேட்புமனுவில், அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் என மொத்தம் ரூ.1 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக அறிவித்துள்ளார். அந்த உறுதிமொழிப் பத்திரத்தில், தனது மனைவிக்கு 80 கிராம் தங்கம் உட்பட ரூ.60 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள அசையும் சொத்துக்களும், ரூ.36 லட்சம் மதிப்புள்ள அசையாச் சொத்துக்களும் இருப்பதாக அறிவித்துள்ளார். தனக்கு ரூ.45 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள அசையும் சொத்துக்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: