பல்கலைக்கழகங்களின் அதிகாரம் பறிபோகும் உயர் கல்வி மசோதா கூட்டாட்சி கட்டமைப்பை மீறுகிறது: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: ஒன்றிய அரசின் உயர்கல்வி மசோதா கூட்டாட்சி கட்டமைப்பை மீறுவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது. ஒன்றிய அரசு விக்‌சித் பாரத் சிக்சா அதிஷ்தான் மசோதாவை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்த மசோதா உயர்கல்வி ஒழுங்குமுறை கட்டமைப்பை சீர்திருத்தம் செய்வதை நோக்கமாக கொண்டு வரப்பட்டது. பல்கலைகழக மானிய குழு(யுஜிசி), அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் மற்றும் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் ஆகியவற்றை இணைத்து ஒரே உயர்நிலை கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்குவதை மசோதா முன்மொழிகிறது.

இந்த மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்திய போது இது கல்வியை மையப்படுத்துவதாகவும், மாநிலங்களின் உரிமைகளை பாதிக்கும் என விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து மசோதா நாடாளுமன்ற கூட்டு குழுவிற்கு அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் விக்சித் பாரத் சிக்சா அதிஷ்தான் கூட்டாட்சி கட்டமைப்பை மீறுவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,உயர்கல்வித் துறை தொடர்பான, நாடாளுமன்ற நிலைக் குழுவின் வருடாந்திர மானியக் கோரிக்கை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) போன்ற முக்கிய ஒழுங்குமுறை அமைப்புகளில் அதிர்ச்சியளிக்கும் வகையில் அதிக எண்ணிக்கையிலான காலிப் பணியிடங்கள் இருப்பதை அந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. விக்சித் பாரத் சிக்சா அதிஷ்தான் (விபிஎஸ்ஏ) மசோதா, 2025 மூலம் உயர்கல்வி கட்டமைப்பை மறுசீரமைப்பதற்கான ஒரு வேலை நடந்து கொண்டிருக்கும் வேளையில், இந்தக் செய்தி வந்துள்ளது.

அரசியலமைப்பின் பொதுப் பட்டியலில் கல்வி இடம்பெற்றிருந்த போதிலும், மேலும் இந்த மசோதா மாநிலப் பல்கலைக்கழகங்களை நேரடியாகப் பாதிக்கும் என்ற போதிலும், இந்த மசோதாவை வரைவு செய்யும் போது அமைச்சகம் மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்கவில்லை. மசோதாவானது, வி.பி.எஸ்.ஏ-விற்கு வரம்பிற்கு அப்பாற்பட்ட அதிகாரங்களை வழங்குகிறது. மேலும் குறிப்பாக மாநில அரசின் அதிகாரங்களில் அத்துமீறுகிறது. இது அரசியலமைப்பின் கூட்டாட்சி கட்டமைப்பை மீறுவதாக உள்ளது, என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: