திருமலை: திருப்பதி ஏழுமலையானுக்கு நேற்று யுகாதி பண்டிகையையொட்டி சிறப்பு ஆஸ்தானம் நடந்தது. இதையொட்டி கோயில் முழுவதும் சுமார் 10 டன் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
தெலுங்கு வருடப்பிறப்பையொட்டி (யுகாதி) திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு ஆஸ்தானம் நேற்று நடந்தது. இதனையொட்டி பராபவ ஆண்டின் தெலுங்கு பஞ்சாங்கம் ஏழுமலையான் முன் படித்து காண்பிக்கப்பட்டு சிறப்பு வஸ்திரம், நைவேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டது. யுகாதியையொட்டி, கோயில் முழுவதும் சுமார் 10 டன் மலர்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக கோயிலுக்கு வெளியே காய்கறி, பழங்கள், மலர்களால் ராமர், மகாவிஷ்ணு, லட்சுமிதேவி, கிருஷ்ணர் ஆகியோர் உருவங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதற்காக வெளிநாடு மற்றும் நாட்டின் பல மாநிலங்களில் இருந்து நன்கொடையாளர்கள் மூலம் மலர்கள் பெறப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. இது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.
ரூ.3.53 கோடி காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்றுமுன்தினம் 72,332 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 21,852 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ.3.53 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இந்நிலையில் நேற்று யுகாதி பண்டிகை என்பதால் வழக்கத்தைவிட அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் திரண்டனர். வைகுண்டம் கியூ காம்பளக்சில் உள்ள 17 அறைகளில் தங்கியுள்ள பக்தர்கள் சுமார் 12 மணிநேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
