கேரளாவில் பாஜ தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியில் டுவென்டி 20 என்ற கட்சியும் அங்கம் வகிக்கிறது. எர்ணாகுளம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் சற்று செல்வாக்குள்ள இக்கட்சிக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் டுவென்டி 20 கட்சி சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. இதில் பிரபல மலையாள நடிகைகளான லட்சுமி பிரியா, அஞ்சலி நாயர் மற்றும் வீணா நாயர் ஆகியோருக்கு போட்டியிட சீட் வழங்கப்பட்டது. வீணா நாயர் ஏற்றுமானூர் தொகுதியிலும், அஞ்சலி நாயர் திருப்பூணித்துறை தொகுதியிலும், லட்சுமி பிரியா பெரும்பாவூர் தொகுதியிலும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டது. வேட்பாளர் பட்டியல் வெளியான உடனேயே இவர்கள் மூன்று பேரும் பிரசாரத்தில் குதித்தனர்.
ஆனால் இவர்களில் லட்சுமி பிரியா மற்றும் வீணா நாயர் ஆகிய 2 பேருக்கும் ஓட்டு இல்லை என்று தற்போது தெரியவந்துள்ளது. இவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை. இதைத் தொடர்ந்து பெரும்பாவூர் தொகுதியில் லட்சுமி பிரியாவுக்கு பதிலாக புதிய வேட்பாளராக சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி டுவென்டி 20 கட்சியில் சேர்ந்த ஜிபி அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஏற்றுமானூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வீணா நாயருக்கும் ஓட்டு இல்லாததால் அவருக்கு பதிலாக புதிய வேட்பாளரை தேர்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக டுவென்டி 20 கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். இதற்கிடையே வெற்றி வாய்ப்புள்ள திருப்பூணித்துறை தொகுதியை டுவென்டி 20க்கு ஒதுக்கியதற்கு பாஜவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் திருப்பூணித்துறை நகரசபையை பாஜ கைப்பற்றி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
