50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நீக்கம்; மேற்குவங்கத்தில் தேர்தல் கமிஷன் மூலம் நேரடி அரசியல் தலையீடு: முதல்வர் மம்தா குற்றச்சாட்டு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் 50க்கும் மேற்பட்ட மூத்த அதிகாரிகள் தன்னிச்சையாகப் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பது தேர்தல் ஆணையம் மேற்கொண்ட மிக உயர்ந்த அளவிலான அரசியல் தலையீடு என்று முதல்வர் மம்தா குற்றம் சாட்டினார்.

மேற்குவங்க மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவித்த பிறகு தலைமைச் செயலாளர் நந்தினி சக்ரவர்த்தி மற்றும் உள்துறைச் செயலாளர் ஜகதீஷ் பிரசாத் மீனா, டிஜிபி பியூஷ் பாண்டே , கொல்கத்தா காவல் ஆணையர் சுப்ரதிம் சர்க்கார் ஆகியோரை பணிநீக்கம் செய்த தேர்தல் ஆணையம், பல்வேறு மூத்த அதிகாரிகளை அதிரடியாக மாற்றியது. இரண்டு அரசு செயலாளர்கள் தேர்தல் நடைபெறவுள்ள பிற மாநிலங்களுக்குப் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டனர்; மேலும் 13 மாவட்ட கலெக்டர்கள் மாற்றப்பட்டு, புதிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அதே போல் 5 டிஐஜிக்கள் மாற்றப்பட்டு, புதியதாக 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். தேர்தல் கமிஷனின் இந்த நடவடிக்கை மேற்குவங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி தேர்தல் ஆணையத்தைக் கடுமையாகச் சாடிய முதல்வர் மம்தா பானர்ஜி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
தேர்தல்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாகவே, 50க்கும் மேற்பட்ட மூத்த அதிகாரிகள் எவ்வித முன்னறிவிப்புமின்றி, தன்னிச்சையாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணையம் மேற்கு வங்கத்தை மட்டும் தனிமைப்படுத்தி, குறிவைத்துச் செயல்படும் விதம் முன்னெப்போதும் இல்லாதது மட்டுமல்லாமல், மிகவும் கவலைக்குரியதாகவும் உள்ளது. 50-க்கும் மேற்பட்ட மூத்த அதிகாரிகள், எவ்வித முன்னறிவிப்புமின்றி, பணிநீக்கம் செய்யப்பட்டது நிர்வாக ரீதியான நடவடிக்கை அல்ல; இது மிக உயர்ந்த அளவிலான அரசியல் தலையீடாகும். உளவுத்துறை, சிறப்புப் பணிக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை போன்ற முகமைகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளை குறிவைத்து பணிநீக்கம் செய்துள்ளனர். தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைகளில் முரண்பாடுகள் உள்ளன. அதாவது, இந்த அதிகாரிகள் தங்கள் பதவிகளிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இது நிர்வாகம் அல்ல.

இது குழப்பம், தடுமாற்றம் மற்றும் அப்பட்டமான திறமையின்மையை அதிகாரமாகச் சித்தரிக்கும் போக்கைப் பிரதிபலிக்கிறது. இந்தச் சூழல் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலைக்குச் சற்றும் குறைவில்லாதது. கட்டாயப்படுத்தல் மற்றும் நிறுவன ரீதியான கையாளுதல்கள் மூலம் மேற்கு வங்கத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதற்கான ஒரு திட்டமிட்ட சதி நடைபெற்று வருகிறது. ஆனால் மேற்கு வங்க அரசின் ஒவ்வொரு அதிகாரியுடனும், அவர்களது குடும்பத்தினருடனும் நான் முழுமையாகத் துணை நிற்கிறேன். மேற்குவங்க மிரட்டல்களுக்கு ஒருபோதும் பணிந்ததில்லை; இனியும் பணியாது.

மேற்குவங்கத்தில் வாக்காளர் பட்டியலைத் தீவிரமாகத் திருத்தும் சிறப்புச் செயல்முறை மிகவும் குறைபாடுடையது. சுதந்திரம் பெற்று 78 ஆண்டுகள் கடந்த பிறகும், குடிமக்களை வரிசையில் நிற்க வைத்துத் தங்கள் குடியுரிமையை நிரூபிக்கச் செய்வதன் மூலம் அவர்களுக்கு என்ன மனநிறைவு கிடைக்கிறது?. இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.

ஆர்ஜி கர் மருத்துவமனையில் கொலை பெண் டாக்டரின் தாய் பா.ஜவில் சீட் கேட்கிறார்
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆா்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கருத்தரங்கக் கூடத்திற்குள் வைத்து, 31 வயதான பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட பெண் டாக்டரின் தாய் தற்போது மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து உள்ளார். வட 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பனிஹாட்டி தொகுதியில் போட்டியிட விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். பா.ஜ மூத்த தலைவர் அர்ஜூன் சிங் சமீபத்தில் அவரை சந்தித்து பேசியதை தொடர்ந்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். அவர் கூறுகையில்,’எனது மகளுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்யவும், இந்த அரசைப் பதவியிலிருந்து அகற்றவும் நான் அரசியலில் அடியெடுத்து வைக்கிறேன்’ என்று தெரிவித்தார்.

மேற்குவங்கத்தில் பா.ஜ 2வது பட்டியலில் 111 வேட்பாளர்கள்
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்கான, 111 வேட்பாளர்கள் அடங்கிய தனது இரண்டாவது பட்டியலை பாஜ நேற்று வெளியிட்டது. இப்பட்டியலில், ஹிங்கல் கஞ்ச் தொகுதியிலிருந்து ரேகா பத்ராவும், சோனார்பூர் தக்‌ஷின் தொகுதியிலிருந்து ரூபா கங்குலியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இட்டாஹார் தொகுதியிலிருந்து சபிதா பர்மனும், நபாகிராம் தொகுதியிலிருந்து திலீப் சஹாவும், கார்கிராம் தொகுதியிலிருந்து மிட்டாலி மாலும், கண்டி தொகுதியிலிருந்து கார்கி தாஸ் கோஷும் போட்டியிட உள்ளனர். பாரத்பூர் தொகுதியிலிருந்து அனாமிகா கோஷும், போன்கான் தக்‌ஷின் தொகுதியிலிருந்து ஸ்வபன் மஜும்தரும், காமர்ஹட்டி தொகுதியிலிருந்து அருப் சௌத்ரியும், சந்தேஷ்காலி தொகுதியிலிருந்து சனத் சர்தாரும், மந்திர் பஜார் சட்டமன்றத் தொகுதியிலிருந்து மல்லிகா பாய்க்கும் தேர்தல் களத்தில் இறங்க உள்ளனர். எண்டலி சட்டமன்றத் தொகுதிக்கான தனது வேட்பாளராக பிரியங்கா திப்ரேவாலையும், பாலகர் சட்டமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக சுமனா சர்க்காரையும் பாஜ அறிவித்துள்ளது.

32 வேட்பாளர்களை அறிவித்தது கம்யூனிஸ்ட்
மேற்குவங்க தேர்தலில் 192 வேட்பாளர் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்ட இடதுமுன்னணி நேற்று 32 வேட்பாளர்களைக் கொண்ட தனது இரண்டாவது பட்டியலை அறிவித்தது. நந்திகிராமத்திலிருந்து இ.கம்யூ வேட்பாளர் சாந்தி கிரி மற்றும் நாயாகிராமத்திலிருந்து மார்க்சிஸ்ட் வேட்பாளர் டாக்டர் புலின் பிஹாரி பாஸ்கே ஆகியோர் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள முக்கிய வேட்பாளர்களாவர்.

அரன்முலா தொகுதியில் கும்மனம் ராஜசேகரன்
கேரள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 39 வேட்பாளர்கள் கொண்ட தனது இரண்டாவது பட்டியலை பாஜ நேற்று வெளியிட்டது. இப்பட்டியலில், கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும், மிசோரம் மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான கும்மனம் ராஜசேகரனை அரன்முலா தொகுதியில் வேட்பாளராக நிறுத்தியுள்ளது. இவர் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜை எதிர்த்துப் போட்டியிடுவார். இந்த பட்டியலில் இடம் பெற்ற பாஜ மூத்த தலைவர் பி. கோபாலகிருஷ்ணன் குருவாயூர் தொகுதியில் போட்டியிடுகிறார். முதல்வர் பினராயி விஜயன் போட்டியிடும் தர்மடம் தொகுதியில், கே. ரஞ்சித் என்பவரை பா.ஜ வேட்பாளராக நிறுத்தியுள்ளது. பா.ஜ, தற்போதுவரை மொத்தம் 86 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

Related Stories: