234 தொகுதிகளுக்கும் தகுதியான வேட்பாளர்கள் கிடைக்காமல் விஜய் திண்டாட்டம்

 

திருச்சி: தமிழகத்தில் வரும் ஏப். 23ம் தேதி சட்டமன்ற பொது தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தரப்படும் என்று தவெக தலைவர் விஜய் அறிவித்திருந்தார். ஆனாலும் அவருடன் எந்த கட்சியும் கூட்டணி சேரவில்லை. சிறிய கட்சிகள் கூட கூட்டணிக்கு வராததால் விஜய் ஏமாற்றமடைந்தார். இதைத்தொடர்ந்து தவெக தனித்து போட்டியிடும் என்று விஜய் அறிவித்தார். கடந்த 10ம் தேதி எம்எல்ஏ சீட் கேட்டு விருப்ப மனு அளித்தவர்களிடம் விஜய் நேர்காணல் நடத்தினார். தற்போது வேட்பாளர் தேர்வில் அவர் தீவிரம் காட்டி வருகிறார்.

ஆனால் மக்களுக்கு பரிச்சயமான, தகுதியான வேட்பாளர்கள் கிடைக்காமல் விஜய் திண்டாடி வருவதாக கூறப்படுகிறது. இதுபற்றி அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், ஆட்சியில் பங்கு என்று ஆஃபர் அறிவித்தும் எந்த கட்சியும் தவெகவை சீண்டவில்லை. விஜய்யின் பலம் என்னவென்றே தெரியாத நிலையில், அவரை நம்பி செல்வது ரிஸ்க் என கருதியே எந்த கட்சியும் கூட்டணிக்கு முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. கூட்டணி அமைக்கும் முயற்சியில் விஜய் தோல்வியை தழுவி விட்டார் என்பதே உண்மை.கூட்டணி விவகாரத்தை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று தேர்தல் பிரசார மேலாண்மை செயலாளர் ஆதவ் அர்ஜுனா கூறியிருந்தாராம். இதை நம்பி விஜயும் அவரிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளார்.

ஆனால் இந்த விஷயத்தில் சொன்னதை செய்யாததால் ஆதவ் மீது, விஜய் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது வேட்பாளர் தேர்வில் விஜய் ஈடுபட்டுள்ளார். வேட்பாளர்களை பொறுத்தவரை மக்களுக்கு பரிச்சயமான முகமாக இருக்க வேண்டும். அப்படிப் பார்த்தால் தவெகவில் இப்போது செங்கோட்டையன், புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மட்டுமே மக்களுக்கு தெரிந்த முகங்களாக உள்ளனர். மற்றவர்கள் விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் தான். எப்படியும் கடைசி நேரத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு வந்து விடும்.

அவர்களிடம் 60 தொகுதியை தள்ளி விட்டு விடலாம். மற்ற தொகுதிகளில் மக்களிடம் அறிமுகமானவர்கள், டாக்டர்கள், வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரை தேர்தலில் நிறுத்தலாம் என விஜய் முடிவு செய்திருந்தாராம். ஆனால் காங்கிரசும் கூட்டணிக்கு வரவில்லை. எதிர்பார்த்த வேட்பாளர்களும் கிடைக்கவில்லை. இதனால் விஜய் மன உளைச்சலில் இருக்கிறாராம் என்றனர்.

ஆரோக்கியசாமியும் ஆமாம் சாமி விஜயும்
விஜய் தவெகவை துவக்கியதற்கு முக்கிய பங்காற்றியவர் தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி. அவர் என்ன சொல்கிறாரோ, அதை தான் விஜய் கேட்டு வந்தார். ஆமாம் சாமியாக இருந்து வந்தார் என்று கூறப்படுகிறது. ஆனால் அவரது ஆலோசனை கட்சிக்கு பெரிதாக பலனளிக்கவில்லை. கூட்டணியும் அமையவில்லை, வேட்பாளர்களும் கிடைக்கவில்லை, பிரசாரமும் சொதப்பலாகி உயிர்ப்பலி ஆகி விட்டது என்பதனால் ஜான் ஆரோக்கியசாமி மீது விஜய் கடும் அதிருப்தியில் இருக்கிறாராம். வேட்பாளர் தேர்வில் கூட ஜான் ஆரோக்கியசாமியின் ஆலோசனையை புறந்தள்ளி விட்டு, விஜயே நேரடியாக வேட்பாளர் தேர்வில் ஈடுபட்டுள்ளாராம்.

Related Stories: