8 தொகுதி ஆவது கண்டிப்பா வேணும்! அடம் பிடிக்கும் தமாகா; அதிமுக-பாஜ ஷாக்

அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து எந்த அதிகாரப்பூர்வ முடிவுகளும் வெளிவரவில்லை. டெல்லி முடிவா? சென்னை முடிவா? என்ற குழப்பத்தில் கூட்டணி கட்சிகளும், தொண்டர்களும் உள்ளனர். கடந்த மக்களவை தேர்தலில் பாஜ கூட்டணியில் இருந்த தமாகாவிற்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. தற்போதும் அதிமுக, பாஜ கூட்டணியில் தமாகா இடம் பெற்றுள்ளது. 2001 சட்டமன்ற தேர்தலுக்கு பின் சந்தித்த தேர்தல்களில் எல்லாம் தோல்வியை சந்திருந்தாலும் இந்த முறை தமாகா எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்கு செல்வார்கள் என ஜி.கே.வாசனும், நிர்வாகிகளும் நம்பிக்கையுடன் உள்ளனர்.

அவர் அதிமுகவிடம் 12 சீட்களை ஒதுக்குமாறு டிமாண்ட் வைத்திருக்கார். ஆனால் அதிமுக தரப்போ 4 தொகுதிதான் என சொல்ல 10 தொகுதிக்கு தமாகா இறங்கி வந்துள்ளது. அதிமுக தரப்பும் 6 தொகுதியை பைனல் செய்துள்ளது. ஆனால் 8 தொகுதியாவது வேண்டும் என வாசன் அடம்பிடித்து வருவதால் முடிவு எட்டப்படாமல் உள்ளது. 8 தொகுதிகளை கேட்கும் வாசனுக்கு வேட்பாளர்கள் எங்கு இருக்கிறார்கள் என அதிமுக-பாஜ கேள்வி கேட்கிறது. அதே வேளையில் இரண்டாம் கட்ட தலைவர்கள் இந்த தேர்தலில் தங்களுக்கு சீட் ஒதுக்க வேண்டும் என்று வாசனை டார்ச்சர் செய்து வருகின்றனர். குறிப்பாக மேற்கு மண்டலத்தில் காங்கயம், ஈரோடு மேற்கு ஆகிய தொகுதிகளில் ஒன்றை தனக்கு ஒதுக்கும்படி அக்கட்சியின் துணை தலைவர் விடியல் சேகர் வாசனிடம் வலியுறுத்தி வருகின்றார். இதே போல மற்ற நிர்வாகிகளும் வலியுறுத்துவதால் என்ன செய்வது என தெரியாமல் வாசன் தடுமாறி வருவதாக கூறப்படுகின்றது.

* ரூ.100 கோடி ஆஃபர் தந்த மாஜி இன்ஸ்பெக்டர் அதிமுகவுக்கு டாட்டா
நான் சேலம் மண்ணின் மைந்தன் என கூறிக்கொண்டு அரசியல் களத்தில் குதித்துள்ளார் விருப்ப ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் லட்சுமணன். ஜெயலலிதா முதல்வராக இருந்த காலக்கட்டத்தில், அவர் மீது பல்வேறு வழக்குகள் பாய்ந்த நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதிலிருந்து மீண்டு வெளியே வந்த லட்சுமணன், சில ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். அக்காலக்கட்டத்தில் அவர் ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கியதுடன், அதில் கொடிகட்டி பறந்தார். வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டையொட்டி எடப்பாடி பழனிசாமியை சந்தித்து காலில் விழுந்து ஆசி பெற்றுச் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இதையடுத்து அவர் அதிமுகவில் இணைந்து தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார்.

அதிமுகவில் போட்டியிடுவோர் விருப்ப மனு கொடுக்கலாம் என அறிவிக்கப்பட்டவுடன், எடப்பாடி பழனிசாமியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 188 தொகுதியில் எடப்பாடி பழனிசாமி போட்டியிட வேண்டும் என விருப்பமனு கொடுத்தார். அதோடு சேலம் மேற்கு, சங்ககிரி, சேலம் தெற்கு, திருச்செங்கோடு ஆகிய தொகுதிகளில் லட்சுமணன் போட்டியிட விருப்பமனு கொடுத்தார். எப்படியாவது சேலம் மேற்கு, சங்ககிரி ஆகிய தொகுதிகளில் ஒன்றை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் தீவிரம் காட்டிவந்தார். ஆனால் அதிமுகவினர் அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கட்சிக்காக சிறுதுரும்பை கூட கிள்ளிப்போடவில்லை. அவருக்கு சீட் கொடுப்பதா என்ற கேள்வியை எழுப்பினர். ஆனால் லட்சுமணன் எதிர்பார்த்தபடி சீட் கிடைக்கவில்லை. சேலம் மேற்கு தொகுதி அன்புமணி பாமகவுக்கு போய்விட்ட நிலையில், சங்ககிரியிலும் சீட் இல்லை என எடப்பாடி கை விரித்து விட்டார். இதனால் அவர் கடும் அதிர்ச்சிக்கு ஆளானார்.

இந்நிலையில் மாஜி போலீஸ் அதிகாரியான லட்சுமணன், நடிகர் விஜய்யின் தவெகவில் தன்னை இணைத்து கொண்டார். அவருக்கு சேலம் மேற்கு தொகுதி ஒதுக்கப்படும் என வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளதாக தவெக தொண்டர்கள் கூறி வருகின்றனர். அதோடு த.வெ.க. மாவட்ட செயலாளராக இருக்கும் தமிழன் பார்த்திபன் போட்டியிடும் தெற்கு தொகுதியின் தேர்தல் செலவையும் லட்சுமணன் ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இதுகுறித்து அதிமுகவினர் கூறுகையில், ‘‘எப்படியாவது தேர்தலில் போட்டியிட்டே ஆக வேண்டும் என்பதில் லட்சுமணன் உறுதியாக இருந்தார். எடப்பாடியும், லட்சுமணனும் ஒரே சமூகமாக இருந்ததால் அதுநடக்கும் என்றிருந்தார். தேர்தலில் ரூ.100 கோடி செலவு செய்வதாக கூறியதால் இவரை பயன்படுத்தி கொள்ள திட்டமிட்டிருந்தோம். ஆனால் சீட்டுக்காக நடிகர் கட்சிக்கு சென்றுவிட்டார். அவர் த.வெ.க. கீழ் மட்ட நிர்வாகிகளுக்கு பணத்தை அள்ளிவிட்டு வருகிறார். அக்கட்சியினருக்கு பிரியாணி விருந்து வழங்கி வருகிறார்,’’ என்றனர்.

* தமிழகம் – கேரளா தேர்தல் 20 ஆண்டுகால சரித்திரம் மாறியது!
இந்தியத் தேர்தல் வரலாற்றில் எப்போதும் ஒரு ‘இரட்டை மாநிலங்கள்’ போலவே பார்க்கப்படும் தமிழகமும் கேரளாவும், இந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைச் சந்திக்கின்றன. கடந்த 20 ஆண்டுகளாக (2006 முதல் 2021 வரை) ஒரே நாளில் வாக்குப்பதிவைச் சந்தித்து வந்த இந்த அண்டை மாநிலங்கள், இந்த முறை முதன்முறையாக வெவ்வேறு தேதிகளில் தேர்தலைச் சந்திக்கின்றன. கடந்த நான்கு சட்டமன்றத் தேர்தல்களை உற்றுநோக்கினால், தமிழகமும் கேரளாவும் பிரிக்க முடியாத சகோதரர்களாகவே தேர்தலைச் சந்தித்தன.
2006: மே 8, 2011: ஏப்ரல் 13, 2016: மே 16, 2021: ஏப்ரல் 6. ஆனால், 2026-ல் கேரளாவிற்கு ஏப்ரல் 9 என்றும், தமிழகத்திற்கு ஏப்ரல் 23 என்றும் தேர்தல் ஆணையம் தேதிகளைக் குறித்துள்ளது. இந்த 14 நாட்கள் இடைவெளி அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Related Stories: