தவெகவில் இருந்து விலகிய நடிகை ரஞ்சனா நாச்சியார் திமுகவில் இணைந்தார்: விஜய் பற்றி பரபரப்பு பேட்டி

சென்னை: தவெகவில் இருந்து விலகிய நடிகை ரஞ்சனா நாச்சியார் நேற்று திமுகவில் இணைந்தார். தமிழக வெற்றிக் கழகத்தில் மகளிரணி நிர்வாகியாக இருந்தவர் நடிகை ரஞ்சனா நாச்சியார். இவர் நடிகர் விஜய்-சங்கீதா விவாகரத்து தொடர்பாக விஜய் மீது பல்வேறு விமர்சனங்களை பொது வெளியில் முன்வைத்தார். மேலும் விஜய் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன் வைத்தார். தொடர்ந்து அந்த கட்சியில் இருந்து விலகினார். இந்நிலையில் திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று சந்தித்து ரஞ்சனா நாச்சியார் திமுகவில் இணைந்தார். அப்போது பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைச்சர் தா.மோ.அன்பரசன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, புதுச்சேரி மாநில திமுக ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்பி ஆகியோர் உடனிருந்தனர்.

திமுகவில் இணைந்த பின்னர் ரஞ்சனா நாச்சியார் அளித்த பேட்டி: எனது எண்ணங்களும், எனது கொள்கைகளும் இணைந்து பயணிக்க கூடிய இயக்கம் திமுக. அந்த வகையில் திமுகவில் இணைந்துள்ளேன். தவெகவில் தொடர்ந்து பெண்கள் புறக்கணிப்பும், அவமரியாதையும் நடந்து வருகிறது. பெண்கள் பாதுகாப்பை திமுகவை தவிர வேறு எந்தக் கட்சியாலும் கொடுக்க முடியாது. தேர்தலுக்கு 30 நாட்களே உள்ள நிலையில், இன்னமும் விஜய் மக்களை சந்திக்க வெளியே வரவில்லை. அவரால் இனியும் வெளியே வரமுடியாது என்பது தெரிகிறது. ஏதாவது பிரச்னை என்றால் விஜய்யும் வரமாட்டார், நிர்வாகிகளும் ஓடி ஒளிந்து கொள்வார்கள்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட தவெகவினர் மக்களிடம் செல்லவில்லை. மேடைப் பேச்சுக்கு 4 பேர் இருந்தால் கட்சியை நடத்தி விடலாம் என தவெக நினைக்கிறது. பொறுக்கித் தனம் செய்வது அல்ல அரசியல், பொறுப்போடு நடந்துகொள்வதே அரசியல். விஜய் ஒரு பெரிய அரசியல் தலைவராக வருவார் என்ற நம்பிக்கை எனக்கு போய்விட்டது. அதனால் அந்தக் கட்சியிலிருந்து வெளியே வந்துவிட்டேன். மதவாத கட்சியோடு சேர்ந்து பயணிக்க மாட்டோம் என விஜய் சொல்கிறார். ஆனால், ஆதவ் அர்ஜுனா கூட்டணி பேச்சுவார்த்தை நடந்ததாக சொல்கிறார். இதில் எதனை நம்புவது? ஆதவ், ஜான் ஆரோக்கியசாமி, புஸ்ஸி ஆனந்தை வைத்து கட்சியை நடத்தலாம் என விஜய் நினைப்பது முட்டாள்தனம். தவெக ஒரு மர்மமான முறையில்தான் நடக்கிறது. பொய் நம்பிக்கைகளை விதைத்து மக்களை தவறாக வழிநடத்துகிறது தவெக. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: