தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை பட்டியலிலிருந்து வெளியேற்றியதாக பிரசாரம் செய்யும் குருமூர்த்தி, சீமான் மீது நடவடிக்கை கோரி வழக்கு: ஆதாரங்களுடன் புகார் வந்தால் நடவடிக்கை என ஐகோர்ட்டில் அரசு தகவல்

சென்னை: தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை பட்டியல் வகுப்பிலிருந்து ‘‘பட்டியல் வெளியேற்றம்” என்று பொய் பிரசாரம் செய்யும் ஆடிட்டர் குருமூர்த்தி, சீமான், அர்ஜுன் சம்பத் உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விவரங்களுடன் மனு அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மதுரை மாவட்டம் மானகிரியை சேர்ந்த வழக்கறிஞர் சி.செல்வகுமார் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் கல்வி, பொருளாதார, அரசியல் முன்னேற்றம் முழுமையாக எட்டப்படாத நிலையில் பல்வேறு இடங்களில் சாதி அடிப்படையிலான வெறுப்புணர்வும், வன்கொடுமைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பட்டியல் சமூகங்களின் பட்டியலை மாற்றுவது நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் இந்திய அரசியலமைப்பின் பிரிவு 341 படி மட்டுமே சாத்தியமாகும் நிலையில், அவ்வாறு முற்றிலும் முன்மொழியாமல் திட்டமிட்ட உள்நோக்கத்துடன் ‘‘பட்டியல் வெளியேற்றம்” என்ற கோஷத்தை அந்த சமூகத்தில் சிலர் பரப்பி வருகிறார்கள். சட்ட விழிப்புணர்வு குறைவாக உள்ள இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்பட்டு, \\”பட்டியல் வெளியேற்றம் மட்டுமே கவுரவமான நிலை” என்ற தவறான கருத்தியலை சமூக வலைதளங்கள் மூலம் பரப்பி வருகின்றனர்.

இதுபோன்ற தவறான கருத்துகளை சமூக வலைதளங்களில் பரப்பி வரும் நபர்களில் ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், அவரது ஆதரவாளரான தூத்துக்குடி கனிராஜ் போன்றவர்களின் கருத்துகள் பதற்றமான சூழ்நிலையை உருவாக்கி வருகிறது. இவர்களது கருத்துகளை ஆதாரமாக கொண்டு சில அரசு பணியாளர்களும், போலி சமூக வலைதள கணக்குகள் மற்றும் யூடியூப் சேனல்கள் ஆகியவை மூலம் பதற்றத்தை உருவாக்குகிறார்கள்.

இது தொடர்பாக தமிழ்நாடு டிஜிபி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை முதன்மை செயலாளர், பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கான தமிழ்நாடு மாநில ஆணையத்தின் தலைவர், சைபர் குற்றப் பிரிவு காவல்துறையின் கூடுதல் டிஜிபி, சென்னை காவல் ஆணையர் அலுவலக சைபர் க்ரைம் பிரிவு காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு பிப்ரவரி 25ம் தேதி புகார் அளித்துள்ளேன். எனவே, எனது மனு மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு காவல்துறை டிஜிபி, தமிழ்நாடு அரசு உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டுமென்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பிப்ரவரி மாதம் டிஜிபியிடம் நேரடியாகவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மின்னஞ்சல் மூலமாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றார் அதற்கு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரரின் கோரிக்கை மனுக்கள் எதுவும் வரவில்லை. குறிப்பிட்ட நிகழ்வையும் குறிப்பிடாமல், பொத்தாம்பொதுவாகவும், ஆதாரமற்றதாகவும் மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. குறிப்பிட்ட விவரங்களுடன் புகார் அளித்தால் உரிய முறையில் பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து, பொய் பிரசாரத்தில் ஈடுபடும் நபர்களுக்கு எதிரான விவரங்கள், தேதிகள் உள்ளிட்ட தகவல்களுடன் அரசிடம் புதிய மனுவை அளிப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு விளக்கத்தை பதிவு செய்துகொண்ட நீதிபதி, வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டார்.

Related Stories: