சென்னை: பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் தேசிய ஜனநாயக கூட்டணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில், நடிகை நயன்தாராவின் பெயரை தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் ஆபாசமாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. அந்த வகையில் தென்னிந்திய நடிகர் சங்கம் அவருக்கு கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில், நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான விஷால் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: சி.வி.சண்முகம் சார், சமீபத்தில் உங்கள் கட்சி மீட்டிங்கில் எங்கள் துறையைச் சார்ந்த ஒரு பெண்மணி, ஒரு கதாநாயகி பற்றி நீங்கள் ரொம்ப ரொம்ப தரக்குறைவாக பேசி இருக்கிறீர்கள். அதற்கு நிறைய பேர் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். கண்டனம் தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தை நீங்கள் தான் ஏற்படுத்தி இருக்கிறீர்கள். அவர் ஒரு நடிகை, அதுமட்டுமல்லாமல் அவர் திருமணமானவர். மேலும் இந்திய சினிமா துறையில் மிகவும் பிரபலமானவர். ஒருத்தரை கொச்சைப்படுத்தி நீங்கள் கைத்தட்டல் வாங்க வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது. நீங்கள் ஒரு நலத்திட்டம் அறிவித்து இதையெல்லாம் செய்ய போகிறீர்கள் என்று கைத்தட்டல் வாங்கிருந்தால் நாங்கள் சந்தோஷப்பட்டிருப்போம்.
ஆனால், இந்த மாதிரி மோசமான வார்த்தையை அந்த நடிகையைப் பற்றி பேசியது தவறு. நீங்கள் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக கூட இருந்திருக்கிறீர்கள். அந்த காலத்தில் நீங்கள் அமைச்சராக இருந்ததால் நான் உங்களிடம் ஒரு விஷயம் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் ரொம்ப தவறான வார்த்தையைப் பயன்படுத்தி இருக்கீங்க. தயவு செய்து உங்களோட மரியாதையை கெடுத்துக்காதீங்க. சமுதாயத்தில் பெண்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும், அது மனதார வர வேண்டும்.
அது உங்களுக்கு வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். எங்கள் துறையைச் சார்ந்த எங்கள் பெண்மணிகள் குறித்து பேசுவது எங்களால் பொறுத்துக்க முடியாது. சக நடிகையாக இருக்கலாம், ஏன் உங்கள் கட்சியில் சார்ந்த ஒரு பெண்மணியாக கூட இருக்கலாம். அவர்களைப் பற்றி நீங்கள் இந்த மாதிரி பேசும் போது கண்டிப்பாக நான் மறுபடியும் பதிவிடுவேன். தயவு செய்து இந்த மாதிரி செய்யாதீங்க, இனிமேல். இவ்வாறு வீடியோவில் சி.வி.சண்முகத்தை விஷால் எச்சரித்துள்ளார்.
