சென்னை: சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்த கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேர்காணல் நடத்தினார். மூன்றாவது நாளாக நேற்று காலை கொங்கு மண்டலத்துக்கு உட்பட்ட கரூர், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி என 33 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் நேர்காணல் நடந்தது. இதில் 1,100க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். அவர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார். அப்போது பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் உடனிருந்தனர்.
பிற்பகலில் கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பூர் கிழக்கு, தெற்கு மாவட்டங்களுக்குட்பட்ட 19 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்த சுமார் 1,000க்கும் மேற்பட்டவர்களிடம் நேர்காணல் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற நேர்காணலில் அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்றனர். 4வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களுக்குட்பட்ட தொகுதிகளுக்கும், மாலை தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு உட்பட்ட தொகுதிகளுக்கும் நேர்காணல் நடைபெறுகிறது.
