புதுடெல்லி: 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்களின் போது கருப்புப் பணம், போதைப்பொருள் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க சிறப்பு கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு ஒன்றிய புலனாய்வு, பாதுகாப்பு அமைப்புகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வருமான வரித் துறை, அமலாக்க இயக்குநரகம், நிதி புலனாய்வுப் பிரிவு, போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் உள்ளிட்டவற்றுக்கு தேர்தல் ஆணையம் தனித்தனியாக சுற்றறிக்கைகளை அனுப்பியது.
இது குறித்து ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘தேர்தல் நடைபெறும் மாநிலங்களில், விமான நிலையங்கள், முக்கிய ரயில் நிலையங்கள், ஓட்டல்கள், ஹவாலா முகவர்கள் மற்றும் நிதி தரகர்களை தீவிரமாக கண்காணித்து, கணக்கில் வராத பணத்தைச் சரிபார்க்க குழுக்களை நியமிக்குமாறு வருமான வரித்துறையை ஆணையம் வலியுறுத்தி உள்ளது. ரூ.10 லட்சத்திற்கு மேல் பணம் இருப்பது வருமான வரித் துறைக்குத் தெரிவிக்கப்பட்டால், அவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல, சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனை அறிக்கைகளை தேர்தல் ஆணையத்துடன் பகிர்ந்து கொள்ளவும், வேட்பாளர்களின் சொத்துக்கள் மற்றும் வேட்புமனு தாக்கல் செய்யும் போது அவர்கள் செய்த அறிவிப்புகள் தொடர்பான தகவல்களை அனுப்பவும் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்துக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து புலனாய்வு மற்றும் அமலாக்க நிறுவனங்களும், தங்கள் சிறப்புக் குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் மற்றும் பறிமுதல்களின் நிகழ்நேரத் தரவை, தேர்தல் ஆணையத்தின் ஆன்லைன் தேர்தல் பறிமுதல் மேலாண்மை அமைப்புக்கு பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
பணமோசடி நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கண்காணிக்க அமலாக்கத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒன்றிய பாதுகாப்புப் படைகள் சர்வதேச எல்லைகளை நெருக்கமான கண்காணிப்பின் கீழ் வைத்திருக்க வேண்டும் என்றும் ஆணையம் கேட்டுக் கொண்டது,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
