புதுடெல்லி: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் எம்சிசி எனப்படும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும்.ஆனால் 2014க்கு பிறகு, எம்சிசி என்பது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அல்ல,அது மோடியின் தேர்தல் பிரசார விதிகளாகும் என காங்கிரஸ் விமர்சித்துள்ளது. காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிட்டுள்ளதாவது:
5 மாநில பேரவை தேர்தல்களுக்கான தேதியை இன்று(நேற்று) மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எம்சிசி என்றால் மோடியின் பிரசார விதிகளை குறிப்பதாகும்.தேர்தல் தேதிக்கு ஜி-1(மோடி), ஜி-2(அமித் ஷா) ஆகியோர் ஒப்புதல் அளித்திருப்பார்கள். சமீபத்தில் ஜி-1 பல்வேறு மாநிலங்களுக்கு சென்று புதிய திட்டங்களை துவக்கி வைத்தும், அடிக்கல் நாட்டி விட்டு வந்துள்ளார்.
அதற்கு பின்னர் தான் தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான தேதியை அறிவிக்கிறது. 2014ம் ஆண்டுக்கு பின்னர் தேர்தல் நடத்தை விதிமுறைகள்(எம்சிசி) என்பது மோடியின் பிரசார விதிமுறைகள் என்றாகி விட்டது. இதில், எதிர்க்கட்சிகளை துஷ்பிரயோகம் செய்வது, மிரட்டல் விடுப்பது, பயத்தை உருவாக்குவது, பொய்களின் வைரஸை பரப்புதல் போன்றவை அடங்கும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
