கோவை: கள்ளச்சந்தையில் விற்பனை செய்த சிலிண்டர்களை பதுக்கியதாக ஏஜென்சி உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 1,000 வர்த்தக சிலிண்டர்கள் பறிமுதல் செய்து, ஏஜென்சிக்கு சீல் வைத்தனர். எரிவாயு சிலிண்டர் பற்றாக்குறையை பயன்படுத்தி சில வியாபாரிகள் சிலிண்டர்களை பதுக்கி கள்ள சந்தையில் அதிக விலையில் விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்தது. அரசு நிர்ணயித்த 19 கிலோ வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.2,100 ஆக இருந்த நிலையில், பதுக்கி வைக்கப்பட்ட சிலிண்டர்கள் ரூ.4,500 முதல் ரூ.5,000 வரை விற்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தது.
இந்த நிலையில் கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள ஒரு ஏஜென்சியில் கள்ளச்சந்தையில் சிலிண்டர் அதிக விலைக்கு விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் பெட்ரோலியம் அதிகாரிகள், சிவில் சப்ளைஸ் சிஐடி போலீசாருடன் இணைந்து அவினாசி சாலை லட்சுமி மில்ஸ் சந்திப்புக்கு அருகிலுள்ள விநாயகர் கோயில் தெருவில் எரிவாயு ஏஜென்சியில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, அங்கு 1,000 வர்த்தக சிலிண்டர்கள் பதுக்கி வைத்து கள்ள சந்தையில் விற்பனை செய்து வந்தது கண்டறியப்பட்டது. உடனடியாக அந்த சிலிண்டர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன், வருவாய் துறை அதிகாரிகளால் ஏஜென்சிக்கு சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து சிலிண்டர் ஏஜென்சி நடத்தி வந்த லட்சுமி மில்ஸ் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (33) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
