புதுடெல்லி: மேற்காசிய பிரச்னையால் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில், சமையல் காஸ் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள அழுத்தத்தை குறைக்க குழாய் மூலம் எரிவாயு வழங்குவதை விரைவுப்படுத்தும்படி நகர்ப்புற எரிவாயு விநியோகஸ்தர்களை ஒன்றிய அரசு அறுவுறுத்தியுள்ளது.
ஒன்றிய அரசு மார்ச் 14ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (விநியோகம் மற்றும் விநியோக ஒழுங்குமுறை) உத்தரவு, 2000 ஐ திருத்தியது. இதன் மூலம் குழாய் இயற்கை எரிவாயு இணைப்புகள் உள்ள நுகர்வோர் தங்கள் வீட்டு எல்பிஜி இணைப்புகளை ஒப்படைக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குழாய் எரிவாயு இணைப்பு உள்ளவர்கள் எல்பிஜி காஸ் இணைப்பு பெறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. என கூறப்பட்டுள்ளது.
* 77 லட்சம் ஆக குறைந்த காஸ் முன்பதிவு
நாட்டில் எல்பிஜி காஸ் சிலிண்டர் முன்பதிவு முன்பு 88.8 லட்சத்தில் இருந்த நிலையில் 77 லட்சமாக குறைந்து விட்டது. மேற்கு ஆசிய போர் நீடித்த போதிலும் விநியோகம் நிலையானதாக இருப்பதாக அரசாங்கம் கூறியுள்ளதால் பீதியில் சிலிண்டர்களை வாங்கி வைக்கும் நிலை மாறி வருகிறது. அரசு,மார்க்கெட்டிங் நிறுவனங்களின் பிரசாரத்தால் ஆன்லைன் முன்பதிவு 84% இருந்து 87 % அதிகரித்துள்ளது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
