திருவனந்தபுரத்தில் பரபரப்பு திருவிதாங்கூர் அரண்மனையில் ரூ.2 கோடி நகை திருட்டு

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் உள்ள திருவிதாங்கூர் அரண்மனையில் இருந்து ரூ. 2 கோடி மதிப்புள்ள ரத்தினங்கள் உள்பட நகைகள் திருடப்பட்டுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் நகரின் மையப்பகுதியில் உள்ள கவடியாரில் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் வசிக்கும் அரண்மனை உள்ளது. 1934ம் ஆண்டு திருவிதாங்கூர் மன்னராக இருந்த பாலராம வர்மா இந்த அரண்மனையை கட்டினார். மூன்று மாடிகளைக் கொண்ட இந்த அரண்மனையில் 150 அறைகள் உள்ளன. ஒரே நேரத்தில் 500 பேர் சாப்பிடும் அளவுக்கு பெரிய அறைகளும் உள்ளன.

தற்போது திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வரும் இந்த அரண்மனையில் பார்வையாளர்கள் யாருக்கும் அனுமதி கிடையாது. இந்த நிலையில் இங்குள்ள ஒரு அறையில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ. 2 கோடிக்கும் மேல் மதிப்புள்ள ரத்தினக் கற்கள், வைரங்கள் உள்பட நகைகள் திருட்டு போனது . கடந்த நவம்பர் மாதம் பீரோவை திறந்து பார்த்த போது இந்த நகைகள் திருட்டு போனது கண்டு பிடிக்கப்பட்டது.

ஆனால் உடனடியாக போலீசில் புகார் செய்யாமல் அரண்மனைக்கு உள்ளேயே விசாரணை நடத்தப்பட்டு வந்தது. கடந்த 4 மாதங்களாக விசாரணை நடத்தியும் எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதனையடுத்து திருவனந்தபுரம் பேரூர்க்கடை போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்யப்பட்டது. திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தை சேர்ந்த கவுரி லட்சுமிபாய் நகைகள் திருட்டு போனது குறித்து புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த அரண்மனையில் ஏராளமான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். முதலில் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த நவம்பர் மாதம் முதல் அரண்மனைக்கு வந்தவர்கள் யார் யார் என்பது குறித்த விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர். பாதுகாப்பு மிகுந்த அரண்மனையிலிருந்து நகைகள் திருட்டு போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: