திருமலை: முன்னாள் எம்எல்ஏவுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் போதை பார்ட்டியில் கலந்து கொண்ட தெலுங்கு தேசம் எம்பி உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். சோதனைக்கு சென்ற போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத் மொய்னாபாத்தில் பிஆர்எஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பைலட் ரோஹித்ரெட்டிக்கு சொந்தமான பண்ணை வீடு உள்ளது. இங்கு போதை மருந்துகளுடன் பார்ட்டி நடப்பதாக போதை மருந்து தடுப்பு சிறப்பு கழுகுப்படை போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் நேற்று முன்தினம் இரவு பண்ணை வீட்டில் சோதனையிட சென்றனர். அப்போது போலீசாரை பார்த்தவுடன், அங்கிருந்த ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட்டார். சுதாரித்துக்கொண்ட போலீசார் அதிரடியாக உள்ளே சென்று அந்த நபரை மடக்கி பிடித்தனர். மேலும் அவரிடம் இருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். பண்ணை வீட்டில் சோதனை நடத்தியதில் போதை மருந்து பயன்படுத்தி பார்ட்டி நடந்தது தெரிய வந்தது.
இதில் பங்கேற்ற தெலுங்கு தேசம் கட்சியின் ஆந்திர மாநிலம் ஏலூரு தொகுதி எம்பி புட்டா மகேஷ், முன்னாள் எம்எல்ஏ பைலட் ரோஹித்ரெட்டி, ரித்தேஷ்ரெட்டி, நமித்சர்மா, ரமேஷ், ஷ்ரவன்குமார், விஜய் கிருஷ்ணா, கவுஷிக் ரவி, ஷெரீப்ரெட்டி, அர்ஜுன்ரெட்டி, பிரியங்காரெட்டி ஆகிய 11 பேரை போலீசார் கைது செய்தனர். அனைவரும் போதை மருந்து சோதனைக்கு உட்படுத்தி மொயினாபாத் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
விசாரணையில் போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தியது டெல்லியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான நமித்சர்மா என்பதும், அந்த துப்பாக்கி முன்னாள் எம்எல்ஏ ரோஹித் ரெட்டியின் தம்பி ரித்தேஷ்ரெட்டிக்கு சொந்தமானது என்பதும் தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து துப்பாக்கி மற்றும் போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
