வடமதுரை: வடமதுரை அருகே அதிமுக நிர்வாகியை மர்மநபர்கள் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே ம.மு.கோவிலூர் பெரியகோட்டையை சேர்ந்தவர் முத்தன் (எ) மருதமுத்து (42). திருமணம் ஆகாத இவர், தனது தாயார் சுப்பம்மாளுடன் வசித்து வந்தார். திண்டுக்கல் மேற்கு ஒன்றிய அதிமுக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி துணை தலைவராக இருந்தார். ஊரில் செங்கல் சூளை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு மருதமுத்து வீட்டிலிருந்து புகையிலைப்பட்டிக்கு செல்லும் ரோட்டில் நடந்து சென்றார். அப்பகுதியில் உள்ள தோட்டம் அருகே சென்றபோது அவரை, மர்மநபர்கள் வழிமறித்து அரிவாளால் வெட்டினர். இதனால் உயிர் பிழைக்க மருதமுத்து அங்கிருந்து ஓட துவங்கினார்.
எனினும் அக்கும்பல் அவரை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டி சாய்த்து விட்டு தப்பியது. இதில் ரத்த வெள்ளத்தில் மருதமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வடமதுரை போலீசார் வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் ஜிஹெச்சிற்கு அனுப்பி வைத்தனர். முதல்கட்ட விசாரணையில் முன்விரோதத்தில் மருதமுத்துவை வெட்டி கொன்றது தெரிய வந்தது. இதுகுறித்து தாய் சுப்பம்மாள் புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து தனிப்படை அமைத்து மர்மநபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் வடமதுரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
