உல்லாசமாக இருந்த போது எடுத்த நிர்வாண வீடியோவை காட்டி தொழிலதிபர் மனைவியிடம் பல கோடி மதிப்பு தங்க, வைர நகை பறிப்பு: மகன் மூலம் காதல் வலை விரித்து தாய், சகோதரன் கைவரிசை

* கள்ளக்காதலனை பிடிக்க மும்பை, ராஜஸ்தான் விரைந்தது தனிப்படை

சென்னை: புரசைவாக்கத்தில் தொழிலதிபர் மனைவியை கள்ளக்காதலில் விழவைத்து, இருவரும் ஒன்றாக இருந்த நிர்வாண வீடியோவை காட்டி தொழிலதிபரின் மனைவியை மிரட்டி ரூ.4 கோடி மதிப்புள்ள தங்கம், வைர நகைகள், வெள்ளி பொருட்கள் பறித்த கள்ளக்காதலனை பிடிக்க தனிப்படை போலீசார் மும்பை, ராஜஸ்தான் விரைந்துள்ளனர். சென்னை புரசைவாக்கம் முருகப்பா தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் ராணி (35, பெயர்மாற்றப்பட்டுள்ளது). தொழிலதிபரின் மனைவியான இவருக்கு, 2 குழந்தைகள் உள்ளனர்.

கணவர் சென்னை அண்ணாசாலையில் கார் மற்றும் ஆட்டோ ஸ்பேர்பார்ட்ஸ் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். ராணி வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பின் 4வது மாடியில், கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சங்கீதா (53) என்பவர், தனது மூத்த மகன் திலீப் (34) மற்றும் இளைய மகன் அங்கிட் (31) ஆகியோருடன் வாடகைக்கு குடியேறினார். அப்போது சங்கீதா, அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளத்தில் வசித்து வரும் தொழிலதிபர் மனைவி ராணியிடம் பேசி பழகி வந்துள்ளார்.

இந்த பழக்கத்தால் தொழிலதிபர் மனைவி, சங்கீதா வீட்டிற்கு அவ்வப்போது வந்து சென்றுள்ளார். அப்போது, சங்கீதாவின் மூத்த மகன் திலீப், தொழிலதிபர் மனைவியிடம் பேசி வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால், தொழிலதிபர் கடைக்கு சென்ற பிறகு, தனியாக இருக்கும் ராணி வீட்டிற்கு திலீப் சென்று உல்லாசமாக இருந்துள்ளார். இதனிடையே, திலீப் நடத்தி வரும் கவரிங் நகை வியாபாரம் சரியாக இல்லாததால், தன்னிடம் உள்ள நகைகளை கொடுத்து உதவியுள்ளார்.

ஒரு கட்டத்தில் தொழிலதிபரின் மனைவி தனது கள்ளக்காதலன் திலீப்பிடம், வீட்டில் உள்ள லாக்கரை திறந்து காண்பித்து, இதில் உள்ள தங்கம், வைர நகைகள் எல்லாம் ‘என் ஆசைநாயகன் உனக்கு தான்’. நாம் இருவரும் சந்தோசமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட திலீப், தொழிலதிபரின் மனைவியிடம் ஒவ்வொரு முறையும் உல்லாசமாக இருந்து விட்டு, நகைகளை வாங்கிக் கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில், கள்ளக்காதலன் திலீப், யாருக்கும் தெரியாமல் தனது வாடகை வீட்டை கடந்த 10 நாட்களுக்கு முன் காலி செய்துவிட்டு தனது தாய், சகோதரருடன் தலைமறைவாகிவிட்டார். வழக்கம் போல் தொழிலதிபர் மனைவி, தனது கணவன் கடைக்கு சென்றதும், தனிமையில் இருக்க ஆசைப்பட்டு, தனது கள்ளக்காதலன் திலீப்பை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

உடனே அவரது தாய் சங்கீதாவுக்கு போன் செய்த போது, அவரது போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த தொழிலதிபரின் மனைவி, கள்ளக்காதலன் வீட்டிற்கு சென்ற போது, வீடு பூட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது. அடுக்குமாடி குடியிருப்பில் வேலை செய்யும் காவலாளிகளிடம் இதுபற்றி ேகட்ட போது, இரவோடு இரவாக திலீப் வீட்டை காலி செய்துவிட்டு சென்றுவிட்டதாக கூறினார். அதை கேட்டு தொழிலதிபரின் மனைவி அதிர்ச்சியடைந்தார்.

தனது கள்ளக்காதலனிடம் பல கோடி மதிப்புள்ள தங்கம், வைர நகைகள், வெள்ளி பொருட்கள் கொடுத்து வைத்ததை திரும்ப எப்படி வாங்குவது என்று தெரியாமல் அவதிப்பட்டுள்ளார். அதேநேரம் தொழிலதிபர் தனது உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிக்கு செல்ல வேண்டி கடந்த 22ம் தேதி வீட்டில் உள்ள லாக்கரை திறந்து பார்த்த போது, அதில் நகைகள் குறைந்து இருந்ததை பார்த்து மனைவி ராணியிடம் கேட்டுள்ளார்.

அப்போது கணவரின் காலில் விழுந்து, திலீப் என்னுடன் பழகி, இருவரும் தனிமையில் இருந்த போது ரகசியமாக செல்போனில் எடுத்த நிர்வாண வீடியோ மற்றும் புகைப்படங்களை வைத்து என்னை மிரட்டி நகைகளை பறித்து சென்றதாக கூறி அழுதுள்ளார். ரூ.4 கோடி மதிப்புள்ள 850 கிராம் தங்க நகைகள், 120 கிராம் மதிப்புள்ள வைர நகைகள், 2.5 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.20 ஆயிரம் குறைந்தது தெரியவந்தது.

பின்னர் சம்பவம் குறித்து தொழிலதிபர் தனது மனைவி மூலம், வேப்பேரி காவல் நிலையத்தில் கடந்த 23ம் தேதி, கள்ளக்காதலன் திலீப் மீதும், நகை பறிப்புக்கு உடந்தையாக இருந்த அவரது தாய் சங்கீதா மற்றும் சகோதரன் அங்கிட் ஆகியோர் மீதும் புகார் அளித்தார். மேலும், திலீப்பிடம் உள்ள நிர்வாண வீடியோ மற்றும் புகைப்படங்களை பறிமுதல் செய்து அழிக்க வேண்டும் என்றும் புகார் அளித்தார்.

போலீசார் விசாரணையில், புரசைவாக்கம் பகுதியில் வேறு ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அவர்கள் இருப்பதாக செல்போன் சிக்னல் காட்டியது. உடனே போலீசார் அங்கு சென்று சங்கீதா, அங்கிட் ஆகியோரை கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான திலீப் நகைகளுடன் தலைமறைவானது தெரிந்தது. அவரை பிடிக்க துணை கமிஷனர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் திலீப் மும்பை வழியாக ராஜஸ்தான் சென்று இருப்பது தெரியவந்துள்ளது.

இதனால் தனிப்படை போலீசார் மும்பை மற்றும் ராஜஸ்தான் விரைந்துள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கள்ளக்காதலனின் தாய் சங்கீதா அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: மகாராஷ்டிராவை சேர்ந்த சங்கீதா, தனது மாநிலத்தை சேர்ந்தவர்கள் குடியிருக்கும் பகுதியில் வீடு ஏதேனும் காலியாக இருந்தால், அந்த வீட்டிற்கு தனது மகன்கள் திலீப் மற்றும் அங்கிட் ஆகியோருடன் குடியேறுவார்.

தொழிலதிபர்களின் மனைவிகளிடம், சங்கீதா நட்பாக பழகுவார். தனது இரண்டு மகன்களில் யாரிடம் தொழிலதிபர் மனைவி பிரியமாக பேசுகிறார் என்று கவனித்து, அந்த மகனிடம் தொழிலதிபர் மனைவியின் செல்போன் எண்ணை கொடுத்து, தனியாக இருக்கும் போது மெசேஜ் அனுப்பும் பழக்கத்தை ஏற்படுத்துவார். அதன்படி, புரசைவாக்கம் தொழிலதிபர் மனைவி ராணியிடம், சங்கீதா நட்பை ஏற்படுத்தி அவருக்கு தனது மகன்களை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

இதில், தனது மூத்த மகன் திலீப்பிடம் தொழிலதிபர் மனைவி சிரித்து பேசி வந்துள்ளார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய சங்கீதா, தனது மூத்த மகன் திலீப்பிடம் தொழிலதிபர் மனைவி ராணியின் செல்போன் எண்ணை கொடுத்து, அவருக்கு மெசேஜ் அனுப்ப சொல்லி பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். இதில், திலீப் விரித்த வலையில் தொழிலதிபரின் மனைவி ராணி சிக்கியுள்ளார். இருரவரும் நெருக்கமாக இருப்பதை படம் எடுத்து வைத்துள்ளார்.

தற்போது தங்கம் ஒரு சவரன் ஒரு லட்சத்தை தாண்டி விற்பனை ஆவதால், சங்கீதா போட்ட திட்டத்தின்படி மூத்த மகன் திலீப், தொழிலதிபர் மனைவி ராணியிடம், நாம் இருவரும் உல்லாசமாக இருந்த வீடியோ மற்றும் நிர்வாண புகைப்படங்களை காட்டி பணம் கேட்டுள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத தொழிலதிபர் மனைவி, என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துள்ளார். அப்போது பணம் எல்லாம் கொடுக்க முடியாது என்று அவர் கூறியதும், லாக்கரில் உள்ள நகைகளை கொடு என்று மிரட்டியுள்ளார்.

அப்போது திலீப், ‘நாம் இருவரும் உல்லாசமாக இருந்த வீடியோ, புகைப்படங்களை உனது கணவன் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் வேறு வழியின்றி வீட்டில் உள்ள தங்கம், வைர நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை தொழிலதிபர் மனைவி கொடுத்துள்ளார். இந்த விஷயம் தொழிலதிபருக்கு தெரிந்ததால், போலீசில் சிக்கி விடுவோம், என்பதால், சங்கீதா தனது மகன்களுடன் வீட்டை காலி செய்துவிட்டு தலைமறைவானது தெரியவந்தது.

இது போல், சென்னையில் பல இடங்களில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் தனிமையில் வசிக்கும் தொழிலதிபர்களின் மனைவிகள் மற்றும் மகள்களை, தாய் சங்கீதா ஆலோசனைப்படி திலீப் மற்றும் அங்கிட் ஆகியோர் காதல் விலையில் விழ்த்தி நகை மற்றும் பணத்தை பறித்து வந்தது தெரியவந்துள்ளது. மேலும் விசாரணையில் திலீப் மற்றும் அவரது தாய், சகோதரன் மீது மாதவரத்தில் 2 வழக்கும், ஐஸ்ஹவுஸ் பகுதியில் ஒரு வழக்கும் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.

Related Stories: