மண்டபம்: மண்டபம் அருகே, இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.5 லட்சம் மதிப்பிலான 630 கிலோ முந்திரி பருப்பை கியூ பிரிவு போலீசார் இன்று அதிகாலை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வாலிபரை கைது செய்து, தப்பியோடிய மற்றவர்களை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் பகுதியில் இருந்து கடல்வழியாக இலங்கைக்கு மஞ்சள், சோப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க கியூ பிரிவு மற்றும் மரைன் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதையொட்டி கடற்கரை பகுதியில் தீவிர ரோந்து சென்று வருகின்றனர். இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கடலோரப் பகுதியில் இருந்து இலங்கைக்கு பொருள்கள் கடத்தப்பட இருப்பதாக மண்டபம் கியூ பிரிவு போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், போலீசார் நேற்றிரவு கடலோரப் பகுதியில் தீவிர ரோந்து சென்றனர். இன்று அதிகாலை 2.30 மணியளவில் மரைக்காயர்பட்டினம் கடற்கரை அருகே, மீன்பிடி வலை பின்னும் கூடம் பகுதியில், நாட்டுப்படகில் சிலர் பொருள்களை ஏற்றியுள்ளனர்.
அப்போது போலீசார் வருவதைப் பார்த்ததும் அவர்கள் தப்பியோடினர். போலீசார் துரத்திச் சென்று, அவர்களில் ஒருவரை மடக்கிப் பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், பிடிபட்டவர் மரைக்காயர்பட்டினம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த சகுபர் சாதிக் மகன் உமர் பரூக் (25) என்பதும், இலங்கைக்கு முந்திரி பருப்பு கடத்த முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து உமர் பரூக்கை கைது செய்த போலீசார், நாட்டுப்படகில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான 630 கிலோ முந்திரி பருப்பை கைப்பற்றினர்.
மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய 2 கார் மற்றும் 2 டூவீலர்கள், நாட்டுப்படகை பறிமுதல் செய்தனர். இந்த முந்திரி பருப்பு எங்கிருந்து கடத்தி வரப்பட்டது. தப்பி சென்றவர்கள் யார் என்பது கியூ பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
