சென்னை: பாங்காக்கில் இருந்து, ஏர் ஏசியா பயணிகள் விமானம், நேற்று முன்தினம் இரவு, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளில் சந்தேகத்துக்கு இடமானவர்களை சுங்கத்துறை ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது, கேரள மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா பயணியாக சென்று விட்டு சென்னைக்கு திரும்பி வந்தார். அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த நபரிடம் விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரணாக பேசினார். பிறகு இளைஞரை சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று, அவருடைய உடைமைகளை சோதித்தனர். அப்போது சூட்கேசுக்குள் 15 பாலிதீன் கவர் பார்சல்கள் இருந்தன. அவைகளை சுங்க அதிகாரிகள் பிரித்து பார்த்தபோது, 15 பாக்கெட்களில் 5.9 கிலோ உயர் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா சிக்கியது.
இதன் சர்வதேச மதிப்பு, ரூ.6 கோடி.இதையடுத்து, சுங்க அதிகாரிகள் கேரள மாநில இளைஞரை கைது செய்தனர். 6 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணையில், ‘படிப்புக்கு தகுந்த வேலை இல்லாததால் கடத்தல் குருவியாக மாறி முதல்முறையாக கஞ்சா கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், கடத்தி வந்த கஞ்சா பார்சல்களை விமான நிலையத்திற்கு வெளியில் நின்று கொண்டிருந்த மற்றொரு நபரிடம் ஒப்படைத்து விட்டு இந்த இளைஞர் கேரளாவுக்கு திரும்பிச் செல்ல திட்டமிட்டதும் தெரியவந்தது.இதையடுத்து, சென்னை விமான நிலையத்தின் வெளியே கஞ்சா பார்சல் வாங்க காத்திருந்த மர்ம ஆசாமி குறித்து விசாரித்து வருகின்றனர்.
