மாயாவி பட துணை நடிகை விஷ்ணு பிரியாவின் தந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 பேர் கைது

 

கொடைக்கானல்: மாயாவி பட துணை நடிகை விஷ்ணு பிரியாவின் தந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். நடிகர் சூர்யாவின் ‘மாயாவி’ திரைப்படத்தில் நடித்தவர் துணை நடிகை விஷ்ணுப்பிரியா. இவரது தந்தை சூரிய நாராயணன் (73). இவர் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயில் அருகே சொந்தமாக பங்களா வைத்துள்ளார். இங்கு ஆறுமுகம், முரளி ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பங்களாவின் அறைகள் உரிய அனுமதியின்றி சுற்றுலாப்பயணிகளுக்கு வாடகைக்கு விடப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 2 நாட்களுக்கு முன்பு இந்த பங்களாவில், சுற்றுலாப்பயணிகள் போல 5 பேர் வந்து தங்கியுள்ளனர்.

இவர்கள் கடந்த 20ம் தேதி இரவு, பங்களா ஊழியர்கள் ஆறுமுகம், முரளி ஆகியோரை தாக்கி துணியால் கட்டி போட்டுள்ளனர். பின்னர், சூரிய நாராயணனையும், இருக்கையில் அமர வைத்து முகம் மற்றும் உடல் முழுவதும் டேப்பால் சுற்றி கட்டியுள்ளனர். இதில் அவர் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், அவர் அணிந்திருந்த தங்கச்சங்கிலி, மோதிரம் மற்றும் அங்கிருந்த சிசிடிவி கேமரா, ஹார்டு டிஸ்கையும் திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். தொடர்ந்து கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் விஷ்ணு பிரியாவின் தந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். சொத்து பத்திரங்கள், நகை, பணத்துக்காக கொலை நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் மோசடி மற்றும் ஹவாலாவில் ஈடுபடுபவர்கள் என போலீசார் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் சென்னை, அரக்கோணம், திருவள்ளூரைச் சேர்ந்தவர்கள் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: