இன்று மாலை கச்சத்தீவு ஆலய திருவிழா: ராமேஸ்வரத்திலிருந்து 3 ஆயிரம் பக்தர்கள் புறப்பட்டுச் சென்றனர்

 

ராமேஸ்வரம்: கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக தமிழகத்தை சேர்ந்த 3 ஆயிரம் பக்தர்கள் ராமேஸ்வரத்திலிருந்து இன்று காலை படகில் புறப்பட்டுச் சென்றனர். இந்தியா-இலங்கை இடையே கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவில் இரண்டு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். இதன்படி, இந்தாண்டு கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதில் கலந்துகொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ராமேஸ்வரம் துறைமுகத்தில் இன்று காலை 5 மணிக்கு குவிந்தனர். ராமேஸ்வரம் தாசில்தார் அப்துல் ஜாபர் தலைமையில் வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பக்தர்களின் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை முதலில் ஆய்வு செய்தனர். இதையடுத்து கச்சத்தீவிற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட படகின் வரிசைப்படி பக்தர்கள் சோதனை செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து சுங்க இலாகா அதிகாரிகள் பக்தர்களின் உடமைகள் மற்றும் எடுத்துச் செல்லும் பொருட்களை சோதனை செய்தனர்.

பின்னர் மீன்வளத்துறை வழங்கிய உயிர்காப்பு மிதவைகளை பெற்றுக்கொண்டு பக்தர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட படகுகளில் ஏறி காலை 7 மணியளவில் கச்சத்தீவிற்கு புறப்பட்டுச் சென்றனர். ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் வழியனுப்பி வைத்தார். இன்று நண்பகலில் கச்சத்தீவு செல்லும் தமிழக பக்தர்கள் இலங்கை கடற்படையினரால் தீவில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த மிதவை பாலம் வழியாக அந்தோணியார் ஆலயத்திற்கு செல்கின்றனர். மாலை 5 மணியளவில் ஆலயத்தின் முன்பு அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு 2 நாள் விழா தொடங்குகிறது.

இதில், இலங்கை மற்றும் தமிழகத்தை சேர்ந்த பாதிரியார்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்கின்றனர். இதை தொடர்ந்து சிலுவைப்பாதை, திருப்பலி பூஜை, தேர்ப்பவனி என இரவு வரை நிகழ்ச்சி நடைபெறும். நாளை காலை ஆலயத்தின் முன்பு இருநாட்டு பக்தர்கள் பங்கேற்கும் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடைபெறும். இதை தொடர்ந்து பக்தர்கள் நாடு திரும்புவர்.

Related Stories: