அடிப்படை வசதிகளை ஏற்படுத்தினால் வற்றாத சுனை, கோயிலுடன் உள்ள புல்லூத்து சுற்றுலாத் தலமாகும்

*பணிகளுக்காக காத்திருக்கும் பொதுமக்கள்

சோழவந்தான் : மதுரையை அடுத்த நாகமலையின் வட பகுதியில் உள்ள புல்லூத்தில், எழில் கொஞ்சும் வனப்பகுதியில், வற்றாத சுனையுடன் அருள் பாலிக்கும் ஆலயம் அமைந்துள்ளது. இதனை சீரமைத்து சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும் என்பது, பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.மதுரை மேற்கு தாலுகா மேலமாத்தூர் ஊராட்சிக்குட்பட்டது புல்லூத்து கிராமம்.

மதுரை – சோழவந்தான் வழித்தடத்தில் உள்ள சாலையிலிருந்து‘, சுமார் 2 கி.மீ தூரத்தில் நாகமலை அடிவார வனப்பகுதியில் இயற்கை எழில் சூழ்ந்த இவ்விடத்தில் சுனை ஊற்றுடன் கூடிய ராக்காயி அம்மன் கோயில் அமைந்துள்ளது.

துவரிமான் நான்கு வழிச்சாலை அருகே உள்ள இச்சாலையில் பிரிந்து, வனப்பகுதிக்கு செல்ல, சுமார் ஒரு கிமீ தூரத்திற்கு நல்ல தார்ச்சாலை உள்ளது. அடுத்த ஒரு கிமீ தூர மண் சாலையும் தற்போது பூமிபூஜை நடைபெற்று தார்ச்சாலை அமைக்கும் பணிகள் துவங்கி உள்ளது.

அதற்கடுத்துள்ள சுமார் 200 மீட்டர் தூரம் மட்டும் உரிய சாலை வசதியின்றி, நடந்து செல்லும் அளவில் மிக குறுகிய பாதையாக உள்ளது. இப்பாதையில் முதலில் தனியாக மரத்தடியில் கருப்புச்சாமி அருள் பாலிக்கிறார்.

அடுத்து வற்றாத சுனை எனும் நீரூற்றும், அதன் அருகே ராக்காயி, நாகம்மாள், சிவன், விநாயகர், முருகன் ஆகிய சிலைகளும் உள்ளன. மதுரை அழகர் கோயில் மலையில் உள்ள சுனையுடன் கூடிய ராக்காயி அம்மன் கோயில் அமைப்பிலேயே இங்கும் கோயில் அமைந்திருப்பது சிறப்பு.

இதற்கு சற்று தூரத்தில் பழமையான நாக தேவதைக்குரிய ‘பெரிய புற்று’ அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகள் பழமையான கோடையிலும் வற்றாததாக இங்கிருக்கும் நீருற்று பல்வேறு மூலிகைகளின் வேர்கள் வழியாக வருவதால், நோய் தீர்க்கும் மருந்தாகும் கருதப்படுகிறது.

இந்த நீருற்று உருவாகும் இடம், இதுவரை கண்டறியப்படவில்லை. பல்வேறு வகை மரங்கள், மூலிகை செடிகள் உள்ள வனப்பகுதியில் வரும் இந்த நீர் எப்போதும் குளிர்ச்சியுடனும், சுவையாகவும் இருப்பது சிறப்பானது.

இவற்றுடன் இப்பகுதியில் மான், முயல், குரங்கு உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகளும் வசிக்கின்றன. இதன்படி இப்பகுதி என்பது ஒரு ஆன்மிக தலமாக கட்டுமின்றி, இயற்கை வளங்களுடனும் சிறப்பாக அமைந்துள்ளது. புல்லூத்து கிராமத்தில் ஆங்காங்கே வீடுகள், தனியார் எஸ்டேட், காட்டேஜ், தொண்டு நிறுவனம் என பல இருப்பினும், சுனை ஊற்றுடன் கூடிய ராக்காயி அம்மன் கோயில் மிகவும் பிரபலமானதாக உள்ளது.

எனவே இந்த பகுதியை, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து மேம்படுத்தி, சுற்றுலாத்தலமாக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.இங்குள்ள கோயிலில் தரிசனத்திற்கு வந்த கச்சைகட்டி சுரேஷ் கூறுகையில், ‘‘அழகர் மலைக்கு செல்லாதவர்கள் இங்கு வந்து வழிபட்டால் அதே பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பலருக்கும் இது குல தெய்வமாக உள்ளது .தீர்த்தத் தொட்டியில் புனித நீராடி விட்டு கருப்புச்சாமி, நாக தேவதை புற்று, ராக்காயி அம்மன் உள்ளிட்ட தெய்வங்களை வணங்கினால், வேண்டிய வரம் கிடைக்கும். இத்தனை சிறப்பு வாய்ந்த ஆலயத்திற்கு சுமார் 200 மீட்டர் தூரம் குறுகிய பாதையில் நடந்து வர வேண்டியதாக உள்ளது.

இதனால் குழந்தைகள், வயதானவர்கள் மிகவும் அவதி அடைகின்றனர். எனவே பாதையை விரிவுபடுத்தி, அனைத்து பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய சுற்றுலாத்தலமாக இதனை மாற்ற வேண்டும். சுமார் 15 கி.மீ தூரமுள்ள மதுரையிலிருந்து கோயில் வரை அரசு பேருந்தும் இயக்க வேண்டும்.

இதனால் மதுரை மக்களுக்கு அழகிய இயற்கை வளத்துடன் கூடிய மேலும் ஒரு மலைக்கோயிலை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். எனவே இந்த பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும்’’ என்றார்.

கட்டக்குளம் பாண்டியம்மாள் கூறுகையில், ‘‘பக்திக்குரிய இந்த ஆலய பகுதியில் கூடும் நபர்கள், புனித நீராடும் சுனை தொட்டியில் அமர்ந்து மது அருந்தி விட்டு பாட்டில்களை உடைத்து போடுகின்றனர். இதனால் பக்தர்கள் மட்டுமன்றி குரங்கு உள்ளிட்ட வன உயிரினங்களும் அவதியடையும் நிலை உள்ளது. அவர்கள் வீசும் பிளாஸ்டிக் பைகளால் வனப்பகுதி மாசடைகிறது.

குழந்தை வரம் தரும் ஊற்று என்பதை குறிக்கும் வகையில் ‘பிள்ளை ஊற்று’ என்பது தான் பிற்காலத்தில் புல்லூத்து என மருவியதாக கூறுகின்றனர். இதுபோன்ற புனிதமான இடம் மாசுபடுவதை தடுத்து, அனைவரும் வந்து செல்ல பாதை மற்றும் பஸ் போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும்’’ என்றார்.

Related Stories: