கோவில் மட்டம் பகுதியில் செந்நாய் கூட்டம் உலா; தொழிலாளர்கள் அச்சம்

கோத்தகிரி : கீழ்கோத்தகிரி வனச்சரகத்திற்கு உட்பட்ட கோவில் மட்டம் பகுதியில் செந்நாய் கூட்டம் உலா வருவதால் பொதுமக்கள் மற்றும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.கீழ் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகள் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதிகளில் காட்டு மாடு,கரடி,சிறுத்தை,புலி போன்ற வனவிலங்குகள் உலா வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது.

அந்த வகையில் வனப்பகுதிகளில் அரிதாக காணப்படும் செந்நாய்கள், தற்போது கீழ் கோத்தகிரி அருகே உள்ள கோவில் மட்டம் பகுதியில் பகல் நேரத்தில் உலா வருகின்றன. இதனை கண்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அச்சமடைந்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

வனத்துறையினர் கோவில் மட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் செந்நாய் கூட்டங்களின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இருப்பினும் பகல் நேரங்களில் செந்நாய் கூட்டம் தேயிலை தோட்ட பகுதிகளில் உலா வருவதால் தேயிலை பறிக்கும் பணிக்கு செல்ல தொழிலாளர்களும், பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர்.

Related Stories: