திருப்போரூர்: திருத்தணி, திருப்போரூர் முருகன் கோயில்களில் மாசி பிரமோற்சவ விழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள், ‘’ கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா’ என்று பக்தி கோஷங்களை எழுப்பினர். திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் மாசி பிரமோற்சவ விழா இன்று காலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, செம்பாக்கம் கிராமத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட கொடிமர கயிறு மற்றும் கொடி ஆகியவை மாடவீதிகளில் கொண்டுசெல்லப்பட்டு கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதன்பின்னர் சிவாச்சாரியார்கள் காலை 4.30 மணி முதல் கொடியேற்ற விழாவை தொடங்க வேத மந்திரங்கள் ஓத கொடியேற்றினர். கொடி மரத்தை சுற்றிலும் நின்றிருந்த பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா என்று கோஷங்கள் எழுப்பினர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் சுவாமி வீதி உலா நடைபெற்றது.
இன்று இரவு 7 மணிக்கு கிளி வாகனத்தில் வீதி உலா நடக்கிறது. 22ம் தேதி பகலில் தொட்டி உற்சவமும் இரவு பூத வாகன வீதி உலாவும் 23ம் தேதி பகலில் புருஷாமிருக உபதேச உற்சவமும் இரவு வெள்ளி அன்ன வாகன வீதி உலாவும் நடக்கிறது. 24ம்தேதி ஆட்டுக்கிடா வாகன உற்சவமும் இரவு வெள்ளி மயில்வாகன வீதி உலாவும் 25ம் தேதி மங்களகிரி உற்சவமும் இரவு தங்கமயில் வாகனத்தில் பஞ்சமூர்த்தி புறப்பாடும் 26ம் தேதி பகல் தொட்டி உற்சவமும் இரவு யானை வாகன வீதி உலாவும் நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 27ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர்.அன்று இரவு மங்கள சாசன உற்சவம் நடைபெற உள்ளது. 28ம் தேதி பகலில் தொட்டி உற்சவமும் அன்று மாலை ஆலத்தூர் கிராமத்தில் பரிவேட்டை நிகழ்ச்சியும் இரவு குதிரை வாகனத்தில் வீதியுலாவும் நடைபெறுகிறது. மார்ச் மாதம் 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விமான உற்சவமும் சிம்ம வாகனத்தில் ஆறுமுகசுவாமி அபிஷேகம், வீதியுலா நடக்கிறது. 2ம் தேதி காலை வெள்ளித்தொட்டி உற்சவமும் பகல் 12 மணிக்கு கோயிலையொட்டி உள்ள சரவணப் பொய்கை தீர்த்தக்குளத்தில் தீர்த்தவாரியும் இரவு 7 மணிக்கு தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளது.
அன்றைய தினம் இரவு குதிரை வாகனத்தில் அவரோகனம், மௌன உற்சவம், சண்டேஸ்வரர் உற்சவம் நடைபெறுகிறது. 3ம்தேதி மாலை கிரிவல உற்சவம், இரவு பந்தம்பரி உற்சவம், கிரிவலப்பாதையில் உள்ள மண்டபத்தில் மண்டகப்படியும் நடக்கிறது. 4ம் தேதி மாலை வேடர்பரி உற்சவமும், 5ஆம் தேதி வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு வள்ளியை முருகப் பெருமான் மணம் புரியும் திருக்கல்யாண உற்சவமும் தங்க மயில் வாகனத்தில் வீதி உலாவும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமாரதுரை, உதவி ஆணையர் ராஜலட்சுமி, செயல் அலுவலர் குமரவேல், மேலாளர் வெற்றிவேல் முருகன் உள்பட பலர் செய்துள்ளனர். இதுபோல், முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோயிலில் மாசிப் பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதையொட்டி நேற்று மாலை அங்குரார்பணம் நடைபெற்றது. இன்று காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. காலை 8 மணிக்கு கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. கொடி மரத்திற்கு எதிரில் சிறப்பு மலர்கள் மற்றும் மயில் இறகு மாலை அணிவிக்கப்பட்டு வள்ளி,தெய்வானை சமேதராக உற்சவர் முருகப்பெருமான் எழுந்தருளினார். தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற உள்ள விழாவில் தினமும் காலை, மாலை நேரங்களில் உற்சவர் வாகன சேவையில் எழுந்தருளி கோயில் மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். வரும் 27ம் தேதி தேர்த் திருவிழா நடைபெறுகிறது. மார்ச் 1ம் தேதி அதிகாலை வள்ளி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
