சென்னை : ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனம் (NLC India Ltd) பல்வேறு சுற்றுச்சூழல் விதிமீறல்களில் ஈடுபட்டது இந்தியத் தலைமை கணக்குக் கட்டுப்பாட்டாளர் (CAG) அறிக்கை மூலம் அம்பலம் ஆகி உள்ளது. NLC நிறுவனத்தின் 2017 -18 முதல் 2022 -23 ஆண்டுகளுக்கு இடையேயான செயல்பாடுகளை ஆய்வு செய்த CAG பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் ஒரு விரிவான அறிக்கையைச் சமர்ப்பித்தது. அநத அறிக்கையில், NLC நிறுவனம் உரிய சுற்றுச்சூழல் அனுமதியின்றி செயல்பட்டது, நிபந்தனைகளுக்குப் புறம்பாக சுரங்கத்திற்காகத் தோண்டப்பட்ட மண்ணை அதிக உயரத்துக்குக் கொட்டி வைத்தது, அனல்மின் நிலையத்தை முறையாகப் பராமரிக்காதது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
மேலும் அந்த அறிக்கையில், “சுரங்கம்-I-க்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியின் நிபந்தனைகள்படி, சுரங்கம் தோண்டும்போது எடுக்கப்படும் மண், பாறை உள்ளிட்டவற்றை 20 மீட்டர் உயரத்திற்கு 28 டிகிரி சரிவு இருக்கும்படியாகத்தான் கொட்ட வேண்டும். ஆனால், விதிகளுக்குப் புறம்பாக 50 மீட்டர் உயரத்துக்கு மண் கொட்டப்பட்டிருக்கிறது. அதிகப்படியான மழைப்பொழிவு ஏற்பட்டால் அந்த மண் குவியல் சரிந்து விழும் அபாயம் உள்ளது.
அதே போல, சுரங்கம் II-க்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியின்படி கொட்டப்படும் மண் மற்றும் பாறைகளின் உயரம் 65 மீட்டர் மற்றும் 28 டிகிரி சரிவு என்கிற அளவைத் தாண்டக்கூடாது. ஆனால், இந்நிபந்தனைக்கு மாறாக 120 மீட்டர் உயரத்துக்கு மண் கொட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக மண் சரிந்து அருகிலுள்ள கால்வாய் மற்றும் விவசாய நிலங்களை மூடியிருக்கிறது.” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
