திருச்செந்தூர் கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

 

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மிகவும் பிரசித்திப்பெற்ற மாசித் திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகின்ற மார்ச் 2ம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்க்கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆவணி மற்றும் மாசித் திருவிழாக்கள் மிகவும் பிரசித்திப் பெற்றவையாகும். இந்த ஆண்டு மாசித் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு திருக்கோயில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 3 மணிக்கு உதய மார்த்தாண்ட தீபாராதனை நடைபெற்றது.

அதிகாலை 4 மணியளவில் கொடிப்பட்டமானது, வெள்ளிப்பல்லக்கில் வைத்து 9 சந்திகள் வழியாக கொண்டுவரப்பட்டு பஞ்ச வாத்தியங்கள் முழங்க, வேத பாராயணங்கள் பாட, வாண வேடிக்கை வெடிக்க அதிகாலை 5.05 மணிக்கு திருக்கோயில் பிரகாரத்திலுள்ள செப்புக்கொடிமரத்தில் காப்புகட்டிய கற்பக வீரக்குமார் பட்டர் மாசித் திருவிழாவிற்கான கொடியினை ஏற்றினார். தொடர்ந்து கொடிமரத்திற்கு மஞ்சள், பால், பஞ்சாமிர்தம், வாசனைத் திரவியங்கள் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு அலங்காரமாகி காலை 6.35 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.

வேத விற்பன்னர்கள் வேதபாராயணமும், திருக்கோயில் ஓதுவார்கள் திருமுறை பாராயணமும் பாடினர். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவைத் தொடர்ந்து மாலையில் அப்பர் சுவாமிகள் திருக்கோயிலிலிருந்து தங்க சப்பரத்தில் புறப்பட்டு திருவீதிகளில் உழவாரப்பணி செய்யும் நிகழ்ச்சியும், இரவில் ஸ்ரீ பெலி நாயகர் அஸ்திரத்தேவருடன் தந்தப் பல்லக்கில் 9 சந்திகளில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. சிகர நிகழ்ச்சியாக வருகின்ற மார்ச் 2ம் தேதி காலை 7 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது.

 

Related Stories: